search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல பூஜை"

    • அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும்.
    • காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10.35 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும். அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 கிடைத்துள்ளது.

    கோவிலில் நேற்று வரை 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். மேலும் காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    நாளை (21-ந் தேதி) காலையில் பந்தளம் அரச குடும்ப உறுப்பினரின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 7 மணிக்கு அடைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
    • நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

    அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.

    மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    • பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
    • பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.

    இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னி தானத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க தேவசம்போர்டு சார்பில் குடிநீர், பிஸ்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் முதன்முதலாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். நேற்று மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் இதுவே அதிகமாகும். இதன் காரணமாக நேற்று சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

    பம்பை, நீலிமலை மலைப்பாதை, சபரிபீடம், சன்னிதானம் என அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நீலிமலை, அப்பாச்சிமேடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மலையேற்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கு பக்தர்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை நாளைமறுநாள்(27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆன்லைன் முன்பதிவு நாளை(26-ந்தேதி) 64 ஆயிரமாகவும், நாளை மறுநாள்(27-ந்தேதி) 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அய்யப்பனுக்கு அணி விக்கப்படும் தங்க அங்கி, நாளை மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சரங்குத்தி செல்லும் தங்க அங்கி ஊர்வலம், மாலை 6 மணியளவில் சன்னி தானத்தை சென்றடைகிறது.

    அதன்பிறகு அய்யப்ப னுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். நாளை மறுநாள் மண்டல பூஜை முடிந்து, இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    • மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
    • மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு வழங்கிய ஆலோசனைகளை அமல்படுத்தியதால் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது.

    மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அங்கி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்காக தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது.

    தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பல்வேறு கோவில்களுக்கு செல்கிறது. அப்போது தங்க அங்கியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

    தங்க அங்கி ஊர்வலம் வருகிற 26-ந்தேதி பம்பைக்கு வருகிறது. பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தங்க அங்கியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக சன்னிதானத்தை நோக்கி செல்கிறது.

    மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு ஊர்வலம் வந்தடையும். அங்கிருந்து சன்னிதானத்துக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும். சன்னிதானத்தில் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்கள்.

    அதன்பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மறுநாள்(27-ந்தேதி) வரை அய்யப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

    மண்டல பூஜை விழா முடிந்து அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
    • மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

    மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • 27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ந் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

    27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னையில், மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராத விதமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது. 

    • 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
    • ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.

    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.

    இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.

    மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.

    மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.

    நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.

    விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.

    அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.

    மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.

    மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.

    மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.

    திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.

    அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.

    இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழக்கமான பூஜைகளும் தொடங்கும். பக்தர்கள் அன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சாமி தரிசனத்துக்கு வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை தொடங்க ஒரு வாரமே உள்ளதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் சபரி மலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யன் என்ற செயலி அறிமுகப்படுத்ததப்பட்டு உள்ளது. பெரியார் வன விலங்கு சரணாலயம் மேற்கு பிரிவு சார்பில் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை வனத்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

    இந்த செயலியில் பம்பை, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பை-நீலிமலை, சன்னிதானம், எரிமேலி-அழுதைமலை-பம்பை உள்ளிட்ட சன்னிதான வழித்தடங்களில் உள்ள சேவைகள், யாத்திரையின் அனைத்து அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சபரிமலைக்கு செல்லும் பாரம்பரிய வழத்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகள், தங்குமிடங்கள், யானைப்படை குழுக்கள், பொது கழிப்பறைகள், ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சன்னிதானம் வரை உள்ள தூரம், இலவச குடிநீர் வினியோகிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது.

    யாத்திரையின் போது பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களும் அய்யன் செயலியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த செயலியை தமிழ், மலை யாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

    மேலும் சபரிமலை யாத்திரை செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் ஆங்காங்கிகே கியூ-ஆர் கோர்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்தும் செல்போன்களில் அய்யன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் இந்த செயலி வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்குகிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.5.10 கோடியில் திருப்பணிகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதற் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி யது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    கும்பாபிஷேக விழா

    நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர் நேரு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற கோட்டை மாரியம்மன் தங்க தேரோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்கு கிறது. அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் - செல்வி சார்பில் கோட்டை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் சாமி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24-வது நாள் முடிவடைந்ததையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

    இதில் விநாயகர், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு நவ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணியளவில் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை விளையாட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரியின் வடகரையில் அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.நேற்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு காலை நன் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.மண்டல பூஜை 12 நாள் நிறைவு விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×