மண்டல பூஜையையொட்டி திருப்பூர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் , பறையெடுப்பு நடைபெற்றது.
அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு  விழா, திரளான பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.
அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா, திரளான பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி 14ந் தேதி மஹா கணபதி ஹோமம், பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பிரதம அர்ச்சகர் தலைமையில் கொடியேற்றம், உற்சவத்துடன் விழா தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ,பறையெடுப்பு நடைபெற்றது. 16ந்தேதி மகா விஷ்ணுபூஜை, நவகலச அபிஷேகம் நடந்தது. 17ந் தேதி மஹா கணபதி ஹோமம், மண்டல பூஜை ஆரம்பம், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, பறையெடுப்பு நடைபெற்றது.

நேற்று 18ந் தேதி பகவதி சேவை, பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நடைபெற்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடியேற்று ஆராட்டு உற்சவத்தில் ஸ்ரீ பூதபலி என்கிற பூஜையை சபரிமலை பிரதான தந்திரி செய்தார். இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அய்யப்ப சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது.

ஆராட்டு நாளான இன்று(19-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அய்யப்ப சுவாமி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மேள தாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலையணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6-30மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்பன் ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9-30மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் 14ந் தேதி முதல் இன்று வரை இரவு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com