search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்தியானந்தா
    X
    நித்தியானந்தா

    நித்தியானந்தா ஆசிரமத்தில் 2 பெண்கள் சிறைவைப்பா? மீட்டுத்தரக்கோரி தந்தை வழக்கு

    குஜராத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தனது 2 மகள்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.
    அகமதாபாத்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.

    7 முதல் 15 வயது வரையி லான அந்த 4 மகள் களையும் ஜனார்த்தன சர்மா கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரில் சாமியார் நித்தியானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர்.

    சமீபத்தில் ஜனார்த்தன சர்மாவின் 4 மகள்களையும் பெங்களூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் உள்ள ஹிராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.

    இதையறிந்த ஜனார்த்தன சர்மா தன்னுடைய மகள்களை பார்க்க அகமதாபாத் சென்றார். அப்போது ஆசிரம நிர்வாகிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து ஜனார்த்தன சர்மாவும் அவரது மனைவியும் குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர். அவர்கள் போலீசாருடன் சென்று நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 2 மகள்களை மீட்டனர்.

    ஆனால் அவர்களது மூத்த மகள் லோபமுத்ரா (21), மற்றொரு மகள் நந்திதா (18) ஆகியோர் பெற்றோருடன் வர மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து தனது மகள்களை மீட்டுத் தருமாறு ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் ஆசிரமத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தனது மகள்களை மீட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதற்கிடையே ஜனார்த்தன சர்மா போலீசாரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விவேகானந்தா நகர் போலீசார், நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், குழந்தைகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து அகமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி. அசாரி கூறுகையில், நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    ஜனார்த்தன சர்மா புகாரில் நித்தியானந்தா தனது மகள்களை கடத்தி சட்டவிரோதமாக 2 வாரத்துக்கு மேலாக சிறை வைத்திருப்பதாகவும் தங்களது குழந்தைகளை அவர் மயக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசாரும், மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜனார்த்தனின் மகள்களான லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர்.

    அதில், ‘நித்தியானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் எங்களது சுய விருப்பத்தின் பேரில் தான் தங்கி உள்ளோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எங்களது பெற்றோரை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து விட்டோம். சுவாமிகளின் வழிப்படி நடப்போம்’ என்று கூறி உள்ளனர்.
    Next Story
    ×