search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    பாஜகவுடன் த.மா.கா. இணையாது- ஜி.கே.வாசன்

    பாரதிய ஜனதாவுடன் த.மா.கா. இணையாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


    • பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார்.
    • மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஜி.கே.வாசன் ஆதரித்து வருகிறார்.
    • அதிமுக,பாஜக கூட்டணி மீது தற்போது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தார்.

    தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் நேரில் சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

    இதற்கிடையே ஜி.கே.வாசனை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. தற்போது தமிழக பா.ஜனதாவில் தலைவர் பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் ஜி.கே.வாசன் இன்று டெல்லி சென்றார். காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். நடந்து முடிந்த அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மோடி மீண்டும் பிரதமர் ஆனார்.

    அவரது தலைமையில் சிறப்பான ஆட்சி நடை பெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் போய் சேருகிறது. பிரதமர் ஆன பிறகு மோடியை சந்திக்க விரும்பினேன். அதன்படி இன்று அவரது இல்லத்தில் அவரை சந்திதேன்.

     

    பாஜக

    இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழ்நாட்டின் அரசியல் தற்போதைய மக்கள் மனநிலை ஆகியவற்றை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். அப்போது அவர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அதிக வாக்குகளை பெற்றது. அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது மக்களின் மனமாற்றத்தை தான் காட்டுகிறது.

    அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி மீது தற்போது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது அடுத்து வரும் தேர்தல்களிலும் தொடரும். இது பற்றியும் பிரதமரிடம் தெரிவித்தேன்.

    தொடர்ந்து இந்த கூட்டணியில் த.மா.கா. நீடிக்கும் தனித்தன்மையுடன் செயல்படும். நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். த.மா.கா. சிறப்பாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

    கேள்வி:- த.மா.கா. பா.ஜனதாவுடன்இணையப் போவதாகவும், நீங்கள் தமிழக பா.ஜனதா தலைவர் ஆகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதே?

    பதில்:- அதுவெறும் யூகச்செய்தி. பரபரப்புக்காக சிலர் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நானும் பிரதமரும் 20 நிமிடங்கள் தனியாக பேசினோம். வேறு யாரும் அங்கு இல்லை. தற்போதைய இந்திய அரசியல், தமிழக அரசியல் பற்றி மட்டுமே பேசினோம்.

    3-வது நபர் யாரும் கிடையாது. எனவே, பா.ஜனதாவுடன் த.மா.கா. இணைப்பு என்று எந்த செய்தி வந்தாலும் அது வெறும் யூகம்தான். உண்மை கிடையாது. த.மா.கா. தனித்து செயல்படும்.

    கேள்வி:- மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திப்பீர்களா?

    பதில்:- அவரை சந்திக்க விரும்புகிறேன். தற்போது மராட்டிய மாநில ஆட்சி பற்றிய பிரச்சினையை தீர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனவே இப்போது அவரை சந்திக்க முடியவில்லை. அடுத்த வாரம் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

    பிரதமருடன் நடந்த சந்திப்பில் பொதுவான அரசியல் வி‌ஷயங்கள் மட்டுமே பேசப்பட்டன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை தெரிவிக்கிறேன். த.மா.கா. தற்போதைய கூட்டணியில் தொடரும். தனித்தன்மையுடன் எங்கள் கட்சி செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×