என் மலர்tooltip icon

    இந்தியா

    • 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாக நம்பவைத்துளார்.
    • இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ரண்தீர் (76), சிவ நரேஷ் (42) மற்றும் லட்சுமி (40) ஆகிய மூவரை தன்வர்ஷா - அதாவது பண மழை பொழிய வைக்கும் சடங்கு செய்வதாக கம்ருதீன் பாபா என்ற சாமியார் நம்பவைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்த 72 வயதான கம்ருதீன் பாபா தாந்த்ரீக மையம்நடத்தி வந்துள்ளார்.

    2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாகக் கூறி மூவரையும் கம்ருதீன் நம்ப வைத்துள்ளார்.

    அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பணத்தைத் திருடுவதற்காக விஷம் கலந்த லட்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு மது மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

    சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காருக்குள் நான்காவதாக ஒரு நபர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அது கம்ருதீன் என்பது உறுதி செய்யப்பட்டது.

    முதலில் போலீசாரை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கம்ருதீன் இதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    • கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள்.
    • கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் தேடு பொறி என்ஜின் மட்டுமின்றி யூடியூப், பிளேஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது.

    உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் வித்தியாசமாக கூகுள் யோசித்து தங்களுடைய ஊழியர்களை நீக்கம் செய்கிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் 'விருப்ப ஓய்வு' (பை அவுட்). சட்ட பாதுகாப்பு, நிறுவனத்தின் பெயரை பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்கள் மாற்று வேலை தேடுவதற்கு நேரம் அமைக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட மாத சம்பளம் மற்றும் பிற பண பலன்களை அளித்து வெளியேற்றுவதே விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும்.

    கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள். இதில் என்ஜினீயர்கள், தரவு ஆய்வாளர்கள், விளம்பர பிரிவு, வர்த்தக பரிவு உள்ளிட்டோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப ஓய்வு பெற்று குறிப்பிட்ட ஊழியர்கள் வெளியேறவில்லை என்றால் பணிக்கு லாயக்கில்லை என அந்த நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மறைமுகமாக அறிவித்திருந்தது. தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களுக்கு கூகுள் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் இந்த நடவடிக்கை குறித்து அவர் அறிவித்துள்ளார்.

    அதில் அவர் "2025-ம் ஆண்டில் நீங்கள் சாதித்த அனைத்தினாலும் நாம் இந்த ஆண்டை வலுவான நிலைப்பாட்டில் தொடங்குகிறோம். ஆனால் போட்டி நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சார வேகத்தைப் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவை தாராளமாக ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர் "நிறுவனம் செயல்பட வேண்டிய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், அல்லது நிறுவனத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம்" என்று அறிவித்துள்ளார். தீர்வு அணிகள், விற்பனை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.
    • முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார்.

    அங்கிருந்த சிகையலங்கார நிபுணரிடம் முடியை 4 அங்குலம் குறைக்கும்படி கூறி உள்ளார். ஆனால் சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.

    முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஆணையம், ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓட்டல் நிர்வாகம் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கினால் போதும்' என உத்தரவிட்டது.

    • இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்
    • இந்திய விவசயிகளை பாதிக்கும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு விலக வேண்டும்.

    மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய 'பாரத் பந்த்' வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சையுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் AITUC பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார். 

    கோரிக்கைகள்:

    29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம் (Electricity Amendment Bill), விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா (Draft Seed Bill) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். 

    வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

    அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    சேவைகள் பாதிப்பு:

    வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தால் இன்று, போக்குவரத்து மற்றும் அரசுத் துறை சேவைகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) உள்ளிட்ட வங்கி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், பொதுத்துறை வங்கிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

    ஆனால் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. ஊழியர்கள் வராததால் சில சேவைகள் பாதிக்கும். மேலும் வழக்கம்போல இயங்கும் பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 

    • பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி (MIT-WPU) வளாகத்தில் நேற்று சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.

    பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் உணவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.

    இதில் வங்கதேச மாணவர்கள் அமைத்திருந்த உணவு அரங்கின் மீது பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வங்கதேச தேசியக் கொடியைப் பறித்து அதற்குத் தீ வைத்ததுடன், ஆக்ரோஷமான முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது. 

    பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ் போகாலே கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநபர்கள் என்றும், அவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது
    • இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம்.

    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். காவலில் இருக்கும் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. 

    இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாங்சுக்கின் உடல்நிலை அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும், உடல்நலக் காரணங்களுக்காக அவரை விடுவிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் "உடல்நலக் காரணங்களுக்காக வாங்சுக்கை விடுவிப்பது என்பது ஒரு 'சமூக ஊடக நாடகம்' என்று தெரிவித்தார். 

    அதற்கு, பதிலளித்த நீதிமன்றம், 'ஏன் ஒரு சிறிய விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்த முயல்கிறீர்கள்? நாங்கள் கேள்விகள் கேட்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா?' எனக் கேட்டது. இதற்கு மேத்தா, 'நான் அதைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்.

    மேலும் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடாதீர்கள் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    விசாரணையின்போது சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது என்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது. மேலும் வாங்சுக்கின் அறிக்கைகள் மற்றும் போராட்ட முறைகள் குறித்து அரசு முன்வைத்த வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரத உரையை மேற்கோள் காட்டியது. வாங்சுக் தனது உரையில் "காந்திய வழியில் இருந்து மக்கள் விலகிச் செல்வது கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    இதற்கு, முற்றிலும் இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம். அவரை தேசப்பிதாவுடன் ஒப்பிட வேண்டாம்'. 'இந்த நீதிமன்றம் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டது என்பது நாளைய தலைப்புச் செய்தியாக மாறிவிட வேண்டாம்' என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

    • காலனித்துவ கால "மெக்காலே மனநிலையை" மாற்றும் நோக்கிலான சீர்திருத்தத்தை தமிழகச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
    • திமுகவின் எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான்

    தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைமீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா முழுவதும் அறிவர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இக்கொள்கையை ஏற்றால்தான் கல்விநிதி என ஒருசில நிதிகளையும் பிடித்தம் செய்துவைத்துக்கொண்டு விடுவிக்க மறுத்து வருகிறது மத்திய அரசு.

    இதுதொடர்பாக பலமுறை திமுக தலைவர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வார்த்தைபோர் நிலவியுள்ளது. அதன் விளைவுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த எம்.பி. கமல்ஹாசனின் உரையும். தற்போதுவரை இது தொடர்கிறது. என்ன நிகழ்ந்தாலும், நிதியே ஒதுக்காவிட்டாலும் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மக்கள் பன்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், திமுகதான் அதை அரசியலாக்குகிறது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான் என்றும், பன்மொழி அறிவு என்பது புதிய உலகின் ஒரு ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார். 

    • தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
    • பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    * வரி பகிர்வின் ஒரு பகுதியாக 2027 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.25.44 லட்சம் கோடியை அரசு வழங்கும்

    * 2026-27-ஆம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது

    * நாட்டில் உரப் பற்றாக்குறை இல்லை; விவசாயிகளை ஆதரிக்க உர இறக்குமதிக்கு ரூ.1.71 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு

    * அப்போது சிவசேனா (UBT) சரியான நேரத்தில் நிலம் வழங்கியிருந்தால், இந்தியாவில் புல்லட் ரயில் ஓடியிருக்கும்

    * பாலுக்கு ஜிஎஸ்டி இருப்பதாக டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறுவது முற்றிலும் பொய்.

    * மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவில்லை, ஆனால் இரவில் பெண்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்கிறார்

    * மேற்கு வங்கத்தில் சட்டம் அல்ல, குண்டுகள்தான் நிலவுகின்றன

    * தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது

    * பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்

    * காங்கிரஸ் அரசு உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்தது. ஏழைகளையும், விவசாயிகளையும் விற்றுவிட்டது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    • எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது.
    • தேர்தலுக்கு முன் தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா, அவையில் பேசும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்களை திரும்பப் பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இது குறித்து பூஜ்ஜியம் நேரத்தில் பேசும்போது ராகவ் சதா பேசியதாவது:-

    தற்போதைய நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது 5 வருடம் என்பது மிகவும் அதிகமான காலமாகும். தவறான தலைவர் லட்சக்கணக்கான மக்களையும் முழு பிராந்தியங்களையும் இருளிலும் பின்தங்கிய நிலையிலும் ஆழ்த்த முடியும். செய்த தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்திற்கு வாக்காளர்கள் தகுதியானர்கள். திரும்பப் பெறும் உரிமை அரசியல்வாதிகளுக்கு எதிரான ஆயுதம் அல்ல. ஜனநாயகத்திற்கான காப்பீடு.

    தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நீதிபதிகள், அரசாங்கத்தை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்ற வாய்ப்பை சரியாக செய்யாத எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிராக வாக்காளர்களுக்கு ஏன் வழங்கக் கூடாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    • டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எழுதியப் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்தவாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் பேச்சுப்பொருள். இப்புத்தகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில், மத்திய அரசு ராணுவத்திற்கு ஒத்துழைக்காதது குறித்து நரவனே எழுதியுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    இந்த செய்தி நாடாளுமன்றம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. இதனிடையே தன்னை வைத்து ஒரு பெரும் அரசியலே நடக்கும்நிலையில் எதுகுறித்தும் வாய்திறக்காமல் இருந்தார் முன்னாள் ஜெனரல் முகுந்த் நரவனே. இந்நிலையில் முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    அதாவது இப்புத்தகத்தின் பதிப்பகமான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்தது. அதில், "நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது" என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனை மறுபதிவிட்டு, "இதுதான் புத்தகத்தின் தற்போதைய நிலை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதன்மூலம் தனது புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், விற்பனைக்கு வரவில்லை என்பதையும் நரவனே உறுதிப்படுத்தியுள்ளார்.  புத்தக வெளியீடு தாமதமாவது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர், இது "பழைய ஒயின் காலப்போக்கில் அதன் மதிப்புக் கூடுவது போன்றது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் புத்தகம் எழுதுவது மட்டுமே தனது பணி என்றும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது பதிப்பகத்தின் பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் புத்தகம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. இதற்கிடையில், புத்தகத்தின் சில பகுதிகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியிடப்படாத புத்தகத்தின் சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விளக்கம் கோரி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


    • அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
    • சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

    அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

    சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.

    ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

    அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

    அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

    ராகுல் காந்தி பேசுவது கோமாளித்தனம் என்றும் 2014-2015 காலகட்டத்தில் தான் 'சர்வதேச அமைதி கழக' (International Peace Institute - IPI ) ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியபோதுதான் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பூரி கூறினார்.

    எப்ஸ்டீனை தான் ஒரு குழுவாகவே சந்தித்ததாகவும், அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், "2014-ஆம் ஆண்டு 'லிங்க்ட்இன்' நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. அந்த மின்னஞ்சலில், இந்தியாவின் இணையப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மட்டுமே பேசினேன்.

    எப்ஸ்டீன் மற்றும் IPI தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருப்பதை ராகுல் காந்தி படிக்க வேண்டும்.

    அவர்களது சட்டவிரோதச் செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னைப் பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள்" என்று பூரி தெரிவித்தார்.

    அண்மையில் அமெரிக்க நீதித்துறை சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    பிரதமர் மோடி, அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதன் பின்ணனியிலேயே ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியுள்ளார்.  

    • SR-க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்திருந்த 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் (SR) பணியின்போது, பாஜக-வின் புகார் அடிப்படையில் லட்சக்கணக்கான சந்தேகத்திற்குரிய வாக்குகள் நீக்கப்பட்டுள்ள என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டது. நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரை வாக்காளர் பட்டியில் இடம் பிடித்திருந்த 2.43 வாக்காளர்கள் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இது தொடக்கம் மட்டும்தான். SIR நடத்தப்படும்போது அதிகமான பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதன்முறையாக இவ்வளவு மிகப்பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    சிலர் எங்களை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயன்றனர். நாங்கள் அதை தாண்டி முன்னேறி வெற்றி பெற்றோம். எந்தெந்த வாக்காளர்களுக்கு வசிப்பிடம் இல்லையோ அதுகுறித்து புகார் கொடுத்து, எங்களுடைய பாஜக தொண்டர்கள் பூத் அளவிலான அதிகாரிகளை ஏற்க வைத்தனர்.

    சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு (குடிபெயர்ந்தவர்கள்) எதிராக எங்களுடைய போர் தொடரும்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்தார்.

    முன்னதாக, SR நடவடிக்கையின்போது மியாஸ் முஸ்லிம்களை நெருக்கடிக்குள் வைக்க அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு எதிராக பாஜக தொண்டர்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டன என்றும் ஹிமாந்தா தெரிவித்திருந்தார்.

    அசாமில் பெங்கால பேசும் முஸ்லிம்களை மியாஸ் என அழைப்பார்கள். இது இழிவான சொல்லாக பார்க்கப்படுகுிறது. பெங்கால் பேசாதவர்களால் இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகிறது.

    ×