என் மலர்
இந்தியா
- பிரதமர் மோடி பீகார் வரும்போது ராகுல் காந்தியை திட்டுவார்.
- காங்கிரசின் ராகுல் காந்தி பீகாரில் பிரதமர் மோடியை திட்டுவார்.
பாட்னா:
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பீகார் வரும்போது, ராகுல் காந்தியை திட்டுவார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை திட்டுவார்.
பீகாரில் இருந்து இடம்பெயர்வு எப்படி நிறுத்தப்படும் என்பது பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை.
பீகார் மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவார்கள் என்பது பற்றி இருவருமே பேசவில்லை.
பீகாரில் தொழிற்சாலைகள் இல்லாததற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
- மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
- இன்று இரவு உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தைச் சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் பெற்றுள்ள பெருமை என தெரிவித்தார்.
அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
- அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயமானது அல்ல.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆசியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடீவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், "மாநில ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயப்படுத்தப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
- அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.
அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.
14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.
காலை 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பி துரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தங்கினார்.

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் நேரில் வாழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
இதையடுத்து, மத்திய மந்திரி அமித்ஷாவை, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தங்குகிறார்.
நாளை 17 -ந்தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை ஏராளமான கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
- சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
- ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
மேலும் அங்குள்ள ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள சாலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையை விரைவில் திறக்க மாநில நிர்வாகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் 3 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட நீதிபதி சவின் பன்சால், துணைப் பிரிவு நீதிபதி கும்கம் ஜோஷி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதத்தை பார்வையிட்டனர். காணாமல் போனவர்களை விரைவில் தேடி மீட்குமாறு மீட்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக டேராடூனில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் தரலி-ஹர்சில், சாமோலியில் தரலி, ருத்ரபிரயாக்கில் உள்ள செனகாட், பவுரியில் சைன்ஜி, பாகேஷ்வரில் காப்கோட் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவை இந்த பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1200 கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புடவைகளில் இருக்கும் புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து பதிவிட்டனர்.
- ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக புடவைகளில் இருக்கும் அழகான புகைப்படங்களை பெண்கள் ஜெமினியில் ஜெனரேட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஜெமினியில் புகைப்படங்களை எடிட் செய்வது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெமினியில் புடவையுடன் இருக்கும்படியாக ஒரு புகைப்படம் ஜெனரேட் செய்தேன். ஆனால் அதில், நான் கொடுத்த படத்தில் தெரியாத என்னுடைய மச்சம் ஜெனரேட் செய்யப்பட்ட படத்தில் உள்ளது. ஆகவே ஆன்லைனில் பதிவிடப்படும் அனைத்து அனைத்து புகைப்படங்களையும் ஏஐ கவனிக்கிறது. ஆகவே புகைப்படங்களை பதிவிடும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவித்தார்.
- மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.
இது மட்டுமின்றி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை வைத்து இந்த கும்பல் வசதி படைத்த திருமணமான ஆண்களுக்கு வலை வீசுகின்றனர்.
சபல புத்தியால் ஏமாறும் ஆண்களை இளம்பெண்கள் ஓட்டல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு நெருக்கமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் படம் எடுக்கின்றனர்.
பின்னர் அந்த படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்கள் அப்பாவி போல நடித்து அழுது புலம்பி பணம் பறிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் இந்த ஆண்களுடன் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.
செகந்திராபாத்தை சேர்ந்த யோகா குரு என்பவரை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் யோகா குருவை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது ரகசிய கேமரா மூலம் அதனை படம்பிடித்தனர்.
ஓட்டலில் தனிமையில் இருந்த போது யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை கொன்று விடுவார் எனக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். இதனை நம்பி யோகா குரு ரூ.26 லட்சம் கொடுத்தார். அதனை பறித்துக் கொண்டு இளம்பெண் தலைமறைவாகிவிட்டார்.
இதே போல அரசு ஊழியர் ஒருவர் ஹனி டிராப் டேட்டிங் ஆப்பில் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அந்த இளம்பெண் அவருடன் நீண்ட நாட்கள் தகவல்களை பரிமாறினார். பின்னர் இருவரும் ஒரு ஓட்டல் அறைக்கு சென்றனர்.
அங்கு வைத்து அரசு ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு இளம்பெண் தப்பி சென்று விட்டார்.
இதேபோல பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்பது போலவும் இளம்பெண்கள் ஆண்களை மயக்கி அவர்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 160 பேரை ஹனிடிராப் ஆப் மூலம் ஓட்டல் அறைகளுக்கு அழைத்து சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹனிடிராப், மேட்ரிமோனி டேட்டிங், ஓரினச்சேர்க்கை ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் சபல புத்தி கொண்டவர்கள் இணைகிறார்கள். அவர்களை கவர்ந்து இழுத்து நிர்வாணமாக வீடியோ எடுக்கிறார்கள்.
இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் எடுத்து பணம் பறிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
- முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
- காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).
இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.
பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.
இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.
முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






