என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர்.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணை கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.    

    • இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது.

    இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த திருத்தும் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இதில் பாஜகவின் வாக்கு திருட்டு சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் பீகாரின் தோரையா (Dhoraiya) தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பூத் என் 216 இன் கீழ் வரும் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகியோர் தாங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) அரவிந்த் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில், "ஐயா, நாங்கள் உயிருடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும், எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது  என அதிகாரி அரவிந்த் குமார் அவர்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார்.

    முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் 2018 உயிரிழந்த சோனியா சரண் என்பவரும் 2025 இல் உயிரிழந்த அவரின் மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.  

    • 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.

    சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:-

    எங்களது போராட்டம் காரணமாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் கியாஸ் வீதம், 2 நாட்களில் 30 ஆயிரம் டன் கியாஸ் பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்வது தடைப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறிப்பாக தென்னிந்திய அளவில் நாமக்கல் நகரை மையமாக கொண்டு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக நாமக்கல் நகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை பட்டறைகளில் நிறுத்தி சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2 கோடி வீதம் சுமார் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாண்டில் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கியாஸ் டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்வதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை உருவாகி விடும்.

    இதனால் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிலிண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் தலைமையிலான குழு அசாம் சென்றிருந்தது.
    • கவுகாத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் பி.ஆர். நாயுடு தலைமையிலான குழு நேற்று அசாம் சென்று, அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, முதலமைச்சர் அலுவலகம் செய்து வெளியிட்டுள்ளது.

    • டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி ஏற்பார் என்ற பேச்சு வலுவடைந்து வருகிறது.
    • ஆனால், டி.கே. சிவக்குமார் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். அடுத்த மாதத்துடன சித்தராமையாவின் முதல்வர் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது.

    இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள். இது தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு என்ற தகவல் உலா வருகிறது.

    இதனால், நீங்கள் எப்போது முதல்வர் ஆவீர்கள் என டி.கே. சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், சிவக்குமார் ஆதரவாளர்கள் சில, முதல்வராகுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனத் தெரிவித்து வருகின்றனர்.

    சில மீடியாக்கள் முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியதாக செய்திகள் வெளியிடுகின்றன.

    இந்த நிலையில் லாக் பாக்கில் மக்களை சந்தித்து அவர்களுடன் டி.கே. சிவக்குமார் உரையாடினார். அப்போது அவரிடம், இந்த வருடம் இறுதியில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வராக வேண்டும் என்று சிலர், தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், அவ்வளவுதான். இதை திரித்து கூற வேண்டாம். முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. சில மீடியாக்கள் ஏற்கனவே அவ்வாறு காண்பித்துள்ளன. எனக்கு எந்த அவசரமும் இல்லை.

    நீங்கள் பொய்யான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை உருவாக்கினால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன். எந்த பேட்டியும் கொடுக்கமாட்டேன். அழைக்கவும் மாட்டேன். மீடியாக்களை அழைக்காமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என எனக்குத் தெரியும்.

    நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் போட்டது யார்? நான் அவ்வாறு எங்கே சொன்னேன்? நான் அப்படி எங்கேயாவது சொல்லி உள்ளேனா? யாரோ சிலர் அது பற்றி பேசும்போது, நான் அமைதியாக இருக்கிறேன். அதுப்பற்றி விவாதிக்கக் கூடாது.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

    அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு,  மாணவியை  தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

    அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர் பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் போலவே  தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல்  வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.      

    • ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம்.
    • ரூ. 11,440 கோடி மதிப்பீட்டில் ஆத்ம நிர்பார்தா திட்டம்.

    விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் விரைவான வளர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசு மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டில் தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா ஆகிய 2 புதிய முக்கிய திட்டங்களை கொண்டு வந்து உள்ளது.

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன வேளாண்மை திட்டங்களை பிரதமர் மோடி இன்று டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

    தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், ஆத்ம நிர்பார்தா திட்டம் ரூ. 11,440 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு பயிர் பல்வகைப் படுத்துதல் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.

    பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்டகால குறுகிய கால கடனை எளி தாக்குதல் உள்ளிட்டவைகள் இந்த புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

    இந்த விழாவில் பிரதமர் மோடி விவசாய துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்து தல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    • டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
    • ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.

    ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.

    பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.

    அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    "உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
    • எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.

    2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.

    தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.

    கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
    • கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

    இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.

    இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்'  இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
    • ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.

    உத்தரகாண்டை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் ஆவார்.

    இந்த ஊழல்கள் குறித்து அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்.

    ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) க்கு எதிராக சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார். இது, சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து ஒரு நீதிபதி விலகுவது இது 16வது முறையாகும்.

    இவருக்கு முன், கடந்த செப்டம்பர் 26 அன்று, நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.

    சதுர்வேதி தொடர்ந்த வெவ்வேறு வழக்குகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் இதுவரை விலகி உள்ளனர்.

    நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்காமல் விலகுவதற்கான காரணம் கூறப்படாத நிலையில் ஊழலை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.  

    ×