என் மலர்
இந்தியா

அப்பெண் வேலையை மறுத்து நரகத்திற்கே சென்றாலும் நிதிஷ்குமார் ஹிஜாபை இழுத்தது சரிதான் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்!
- இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது
- நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
பீகாரில் திங்கள்கிழமை அன்று (டிச.15) 1000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், அரசுப் பணிக்கான தங்கள் நியமன கடிதங்களை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் இருந்து பெற்றனர். அப்போது முஸ்லீம் பெண் மருத்துவர் ஒருவரும் பெற்றார்.
அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கும்போது நிதிஷ், அப்பெண் மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை பிடித்து இழுத்தார். அவரின் இந்த செயலை அவரின் அருகில் இருந்தவர்களும் தடுக்க முயன்றனர். ஆனால் பீகாரின் முதலமைச்சரோ சிரித்துக் கொண்டே இந்த வேலையை செய்தார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த செயலால் அப்பெண் மருத்துவர் தனக்கு அரசு வேலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,
"அப்பெண் வேலையை மறுக்கலாம் அல்லது நரகத்திற்குகூட செல்லலாம். அது அவளுடைய விருப்பம். ஆனால், நிதிஷ்குமார் செய்தது சரியே. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? விமான நிலையத்திற்குச் செல்லும்போது, உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்களா? மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இது இந்தியா. இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி மேலோங்கி நிற்கிறது," என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், நிதிஷ்குமார் அப்பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.






