என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜி.என்.கார்டன் நுழைவு வாயில் முன்பு நேற்று காலை 9 மணி முதல் பொதுமக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பத்திர எழுத்தர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிகாமணி தலைமையில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதன்பேரில் மாநகர நல அலுவலர் நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பை மீது மண்ணை கொட்டி மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதற்கு அவர் பரிசீலனை செய்வதாக கூறி அங்கிருந்து சென்றார்.

    இந்தநிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அனைவருக்கும் அங்கேயே இரவு உணவு மற்றும் காலை உணவு, குடிநீர், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
    • ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கை விரைவில் முடித்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

    இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது. வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
    • தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வீரபாண்டி, சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் பாளையம்புதூர், முல்லை நகர், இடும்பன் நகர், காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 7-ந்தேதி நடைபெறும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார் ,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.

    இது தொடர்பாக ரிதன்யா தரப்பு வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் விசாரணையில் அவர்கள் அவகாசம் கேட்டுக்கொண்டதால் நீதிபதி 7-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

    ஒரு அமர்வு நீதிமன்ற வழக்கில் 10 நாட்களுக்குள் யாரும் ஜாமின் கேட்டு மனு செய்ததில்லை. இவர்கள் அரசியல் மற்றும் பணபலம்மிக்கவர்களாக இருப்பதால், உடனே ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் எதிர் மனு தாக்கல் செய்து ள்ளோம். அதன் விசாரணை வருகிற 7-ந்தேதி( திங்கட்கிழமை) நடைபெறும். முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமாக கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சித்ரா தேவியை கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.

    அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். வரதட்சணை கொடுமை வழக்கு மட்டுமின்றி வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு உள்ள காரணங்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசாரின் புலன் விசாரணையில் இருப்பதால் அது முடிந்த பிறகு இது குறித்து விவரமாக வெளியிட முடியும் என தெரிவித்தனர்.

    இதனிடையே ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக்கை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டக்கூடாது. 3-வது குற்றவாளியான மாமியார் சித்ரா தேவியை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியை சேயூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருப்பூர்:

    கும்பகோணத்தில் இருந்து கோவைக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 36 பயணிகள் இருந்தனர். பஸ்சை ராபர்ட் என்பவர் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மின் பகிர்மான அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. டிரைவர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தால் பொங்கலூர் சுற்று வட்டார பகுதி முழுவதும் சுமார் 3 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    • பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும்.
    • சாதி மறுப்பு திருமணங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கணவர், மாமனார், மாமியார் தொல்லை காரணமாக தற்கொலை செய்த புதுப்பெண் ரிதன்யாவின் குடும்பத்தினரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். குடும்பத்தினர் கூறும் போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். வரதட்சணை கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வருகிற போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை என்பது குற்ற செயல்.

    வரதட்சணை என்பது குற்றம் என்று அரசு பிரசாரத்தை மக்களிடமும், கல்லூரிகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த பிரசாரம் என்பது மகளிர் நல துறையின் மூலமாக நடத்த வேண்டும்.

    குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற மா வட்டங்களில் வரதட்சணை கொடுமைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

    ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர், மாமியார் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரையும் கைது செய்ய வேண்டும்.

    இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். ரிதன்யா தற்கொலை சம்பவத்தில் நீதி கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஓரிரு தினங்களில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.
    • தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர்.

    நல்லூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் எக்ஸ்பிரஸ், அதிவேகம், டபுள்டெக்கர், வந்தேபாரத், மெமு என சுமார் 84 ரெயில்கள் வந்து செல்கின்றன. ஒரு சில ரெயில்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் 'ஸ்டாப்பிங்' இல்லாததால் நிறுத்தப்படுவதில்லை. கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.

    காலை வேளையில் திருப்பூருக்கு வேலைக்கு வரும் தினசரி பயணிகள் 'சீசன் டிக்கெட்' மூலம் பயணம் செய்கின்றனர். மாதாந்திர தொகை செலுத்தி இந்த 'சீசன் டிக்கெட்' பெறுகின்றனர். ரெயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் இந்த சீசன் டிக்கெட்டை காட்டி விடுகின்றனர். அதேபோல் சாதாரண பயண டிக்கெட்டையும் மற்ற பயணிகள் காட்டி பயணம் மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த பணிகளில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பிரச்சினைகள் அதிகம் எழுவதில்லை. டிக்கெட் இல்லாத பயணிகளிடம் 'அபராதம்' வாங்கி ரசீது கொடுத்து விடுகின்றனர்.

    ஆனால், திருப்பூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில் பயணிகளால்தான் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பெரும் 'தலைவலி' ஏற்படுகிறது.

    பெரும்பாலும் காலையில் திருப்பூருக்கு வரும் 'தன்பாத்' எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுக்காமல் திருப்பூர் வந்து சேர்கின்றனர். இவர்கள் கணவன், மனைவி, குழந்தைகள், அக்கா, தங்கை, அண்ணன், மச்சான், மாமன் என கூட்டு குடும்பமாக வீட்டு சாமான்களை மூட்டை கட்டி கும்பல் கும்பலாக வருவதாலும், இவர்களிடம் சரிவர பேச முடியாத அளவுக்கு மொழிப்பிரச்சினை இருப்பதாலும் திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.

    இவர்களிடம் 'பயணச்சீட்டு எங்கே?' என்று கேட்டால், 'கியா சாப்.... மாலும் நஹி' என்று பான்பராக் காவிப்பற்கள் தெரிய சிரித்து மண்டையை சொறிந்து நெளிகின்றனர். குழந்தை, குட்டி என பெரும்பட்டாளத்துடன் வரும் இவர்கள் மீது 'அபராதம்' விதித்தால் பணம் இல்லையென்று 'கை'விரித்து பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விடுகின்றனர்.

    ரெயில்வே போலீசாரும் இவர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். டிக்கெட் இல்லாத பயணம் என வழக்கு பதிவு செய்து ஸ்டேஷனில் உட்கார வைத்தால் அந்த 'பெரும்' கும்பலுக்கு டீ, காபி, டிபன் வாங்கிக்கொடுத்து கட்டுபடியாவதில்லை என்று 'பெருமூச்சு' விடுகின்றனர்.

    தினமும் காலையில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத நிலையில், மேலும் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை களத்தில் இறக்கி 'ஒரு கை' பார்த்துவிடலாம் என 'ரவுண்டு' கட்டி பயண டிக்கெட்டுகளை ஆய்வு செய்தாலும் 'நஹி பையா' என்று பான்பராக் வாசத்துடன் பல்லைக்காட்டும் வடமாநிலத்தவர்களால் 'தெறித்து' ஓடுகின்றனர் திருப்பூர் டிக்கெட் பரிசோதகர்கள்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தினமும் காலையில் 'தன்பாத்' ரெயில் மூலம் எங்களுக்கு 'தலைவலி' ஆரம்பம் ஆகிவிடுகிறது. பகலில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களிலும் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருகின்றனர். எல்லா பயணிகளையும் குற்றம் சொல்ல முடியாது. நிறைய பேர் முறையான டிக்கெட் எடுத்து வருகின்றனர். ஆனால் வடமாநிலத்தில் உள்ள சாதாரண கிராமத்தில் இருந்து வரும் கல்வியறிவு இல்லாத பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து திருப்பூர் வருகின்றனர்.

    இந்த பிரச்சினை சென்னை, ஈரோடு, கோவை போன்ற ஊர்களிலும் உள்ளது. தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர். ஆனால் முறையான டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. இதிலும் ஒரு சிலர், ஏசி., பெட்டிகளிலும் ஏறி அமர்ந்து கொண்டு அங்குள்ள முறையாக 'ரிசர்வ்' செய்த பயணிகளை 'இம்சை' படுத்தி அவர்கள் சீட்டை ஆக்கிரமிக்கும் அவலமும் நடக்கிறது. அதுபோன்ற சமயங்களில் 'ஆர்.பி.எப்.,' ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை வைத்து அவர்களை அகற்ற வேண்டியுள்ளது. திருப்பூரில் கும்பல் கும்பலாக வரும் வடமாநில பயணிகளிடம் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனுப்பர் பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்டக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்த 24-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஜி.என். கார்டன் பஸ் நிறுத்தம் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜி.என். கார்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொ.ம.தே.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க., சமூக நல அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரையை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல 3 பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பணியின் போது தண்ணீர் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாய கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நாகலிங்கம் சாயக்கழிவுநீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்க முயன்ற போது முடியவில்லை. உடனே திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த நாகலிங்கத்தை மீட்டனர். இருப்பினும் சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மத்திய போலீசார் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32). இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள் சமூகவலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்பாக பேசிக்கொண்டனர்.

    தொடர்ந்து மணியும் அந்த குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து சில தொகையை பெற்றார். பின்னர் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனர். அந்த குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.

    இதை நம்பிய மணி பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் 14 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அனுப்பினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்துள்ளது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற 2ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டெரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு பாத்திமாநகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தொட்டம்,

    எஸ்.பி.ஐ.காலனி, குமரப்புரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை ப்பொருட்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வீரபாண்டி குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பனியன் நிறுவனங்கள் மற்றும் கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது அங்கு 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பையில் சோதனை செய்த போது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது. அதனைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே கஞ்சா, கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிராஜ் (வயது 25), ஜாகீர் அன்வர்(30) ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் துப்பாக்கிகள் குறித்து விசாரணை நடத்திய போது, பீகாரில் இருந்து ஒரு துப்பாக்கியை ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கி வந்து திருப்பூரில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அவர்கள் இதற்கு முன்பு திருப்பூரில் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனரா, யாருக்கு விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகளை கொண்டு வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகளுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×