என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
    • எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.

    எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.

    இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
    • மகளை இழந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.

    மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்... நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படி என்று நினைக்கும் போது,வருத்தமாக இருக்கு. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கான நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றார். 

    • காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    காங்கயம்:

    காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று காங்கயம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
    • கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.

    மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
    • ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    உடுமலை:

    உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?

    * திருப்பூரில் கலைஞர் அறிவித்த 5 பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில், பணியை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி.

    * அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட 3 ரெயில்வே பாலம் உள்பட 5 பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் நடைபெறுகிறது.

    * அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருகிறோம்.

    * உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.

    * ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    * அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதமும் விதித்தது.

    * எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினார்?

    * எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என தெரியவில்லை.

    * அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் இதே மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது என்றார்.  

    • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
    • காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை. இயற்கை எழில் சூழ்ந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித்தரும் ஊர் உடுமலை.

    * இயற்கை, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை.

    * ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    * பெரியாரும், அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டங்களில் இன்று விழா நடைபெறுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

    * தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

    * ரூ.172 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாடு செய்யப்பட உள்ளது. கீழக்கோவிலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    * திருப்பூர் நியோ டைடல் பூங்கா, 7 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது.

    * நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.

    * பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

    * நவீன வசதிகளுடன் ரூ.9 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பனை கட்டப்படும்.

    * ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும்.

    * அரசு பள்ளிக்கு நிலம் அளித்த சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
    • முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றார் .

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

    இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.

    இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றடைந்தார். .

    இந்நிலையில், உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திடலுக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரு மூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு இயல்புநிலை திரும்புவதுமாக உள்ளது.

    இந்தநிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

    • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    உடுமலை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.

    2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே 53 லட்சம் மதிப்பில், 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    நகராட்சித்துறையின் சார்பில் ரூ.34 கோடியே 80 லட்சம் மதிப்பில் திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி யில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.41 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், திருமுருகன்பூண்டியில் ரூ.39.44 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

    மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    பின்னர் 11.30 மணிக்கு உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பகல் 12 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி யில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகத்தில் பி.ஏ.பி., பாசன திட்டம் அமைய காரணமானவர்களான காமராஜர், சி.சுப்பிர மணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.

    அதன்பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினை வரங்கத்தை திறந்து வைக்கிறார். மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    உடுமலையில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவை, மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    • அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
    • மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் /

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர். மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

    இந்நிலையில், தங்கப்பாண்டி, நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியே கூட்டி வரப்பட்டபோது "எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சிட்டாங்க... கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா?..." என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்னதாக தங்கபாண்டியின் சகோதரரும், கொலையில் சம்பந்தம் உள்ளவர் என சொல்லப்படுபவருமான மணிகண்டன் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
    • மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

    இதனிடையே மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டிக்கு 15 நாட்கள் (ஆகஸ்ட் 21 வரை) நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×