என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    • தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும்,

    திருப்பூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இது குறித்து பா.ஜ.க., மாநில பொது செயலாளர் முருகானந்தம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவின் 2-வது இரும்பு மனிதராக உள்ள அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இதுவரை 180 தொகுதிகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளையும், பல்லடத்தில் நடக்கும் நிறைவு விழாவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நிறைவு விழா பிரமாண்டமாக வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது. கட்சியினர் 10 லட்சம் பேர், பொதுமக்கள் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்துகொள்ள இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


    இந்த பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 400 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடைபெற உள்ளது. வாகனங்களை நிறுத்த 600 ஏக்கர் மற்றும் மக்கள் வந்து செல்வதற்காக 300 ஏக்கர் என ஆயிரத்து 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும் என நினைக்கிறோம். 25-ந்தேதி பிற்பகலுக்கு மேல் நடைபெறும் பொது க்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.தேசிய தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திருப்பூரில் வருகிற 24-ந் தேதி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சியில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை நடைபெறும். பிரதமர் மோடியை பொறுத்தவரை நெருக்கமான மாநிலம், மிகவும் பிடித்த மாநிலம் தமிழகம். நேரடியாக ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜ.க., உள்ளது. புள்ளி விபரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

    தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதில், 100 சதவீதம் பொய் தான். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சேவை செய்யக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. எங்களின் சித்தாந்தாம் வேறு. இது ஒரு இயக்கம். இங்கு யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. லட்சியமே பிரதானம். அரசியல் நகர்வு அண்ணாமலையை நோக்கி தான் செல்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை 2-வது திட்டத்தில் இணைக்க வேண்டும். மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தி.மு.க. அரசு மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தை தொடங்கியதாகவே அர்த்தம். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.

    மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இந்தியா கூட்டணி தொடக்கத்திலேயே முரண்பாடுடன் தொடங்கப்பட்டது. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    திருப்பூர்:

    தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு அரசு பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ் டெப்போவிற்கு பேருந்தை எடுத்து சென்றுள்ளார்

    அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரோட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
    • 10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என், என் மக்கள் என்ற தலைப்பில், மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 18-ந்தேதியுடன் இந்த பயணம் நிறைவடைகிறது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் உள்ள 400 ஏக்கர் தரிசு நிலத்தில் முட்செடிகள், புதர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில், அவர் பங்கேற்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை பா.ஜ.க.வினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதனிடையே திருப்பூரில் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட என் மண், என் மக்கள் பாதயாத்திரையை 25-ந்தேதி திருப்பூரில் நடத்தவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
    • காசிக்கு நிகரான கோவில்

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கோலா கலமாக நடைபெற்றது. கடந்த மாதம்(ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது.

    நேற்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் ,காலை 10 மணிக்கு அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான இன்று 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பம், பேரொளி ஆராதனை நடந்தது.காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.பின்னர் டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, சிவ... சிவ... என எழுப்பிய கோஷம் விண்ணை அதிரச் செய்தது.

    கும்பாபிஷேகத்தை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீகாமாட்சிதாச சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமிகள் ஆகியோர் நடத்தினர்.

    இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார்.
    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அதன்படி பா.ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.


    இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக முக்கிய இடங்களில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வரும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசி வருகிறார்.

    3 கட்டங்களாக நடைபெறும் நடைபயணத்தில் முதல் கட்ட நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    அதன்பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இதில் 2 கட்ட நடைபயணம் முடிந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.


    தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 நாட்கள் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்த நடைபயணம் வருகிற 18-ந்தேதி நிறைவடைய உள்ளது.

    இந்த மாத இறுதியில் சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய இருந்ததுடன், அங்கு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கேற்ப நடைபயண நிகழ்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி திருப்பூரில் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த போதிய இடம் இல்லாததால் திருப்பூரில் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை, அதற்கு பதிலாக திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததுடன், அதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது. வருகிற 25-ந்தேதி நடத்த வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முட்செடிகள் , புதர்களை அகற்றி மண் சமநிலைப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி நிறைவடையும்.


    பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்(எஸ்.பி.ஜி.) விரைவில் திருப்பூர் வருகை தர உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள இடத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க செய்ய பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து பா.ஜ.க. வினர் கூறுகையில், மாதப்பூரில் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    கடந்த மாதம் ஜனவரி 2-ந்தேதி திருச்சி வந்த பிரதமர் மோடி திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆன்மீக பயணமாக கடந்த மாதம் 19-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி அன்று மாலை சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், மறுநாள் 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், அங்கு கடலில் புனித நீராடியதுடன், ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் இரவு ராமேஸ்வரத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய மோடி மறுநாள் 21-ந்தேதி தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புனித நீராடியதுடன், கோதண்ட ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீரை சேகரித்து சென்றார்.

    இவ்வாறு 3 நாட்கள் அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார். தற்போது அரசியல் பயணமாக மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. அ.தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி 2-ம் மாநாடு சேலத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த 2 மாநாடுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் முத்திரைபதித்தது.

    அதேப்போல் பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் திருப்பூரில் நடத்தி காட்ட அண்ணாமலை மற்றும் தமிழக பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதேப்போல் தமிழக பா.ஜ.க.வினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளது தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    அதன்படி நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திற்கான மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல்களில் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இன்றி கடந்த மாத(ஜனவரி) நூல் விலையே தொடரும் என அறிவித்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள்.
    • நாளை 8-ம் கால வேள்வி பூஜை, பேரொளி ஆராதனை நடக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

     இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கும்பாபிஷேக விழா நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோலகலமாக நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்காக 79 குண்டங்களுடன் இதுவரை எந்த கோவிலிலும் இல்லாத அளவில் வேள்வி சாலை அமைக்கப்பட்டுள்ளது. 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள் நடைபெற உள்ளது.

    கடந்த மாதம் (ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது. இன்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும், காலை 10 மணிக்கு அவினாசியப்பர் துணை நிற்கும் அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களான அரசமர வினாயகர், செல்வ வினாயகர், பாதிரியம்மன், வீரபத்திரர், உள்பிரகார கோஷ்ட தேவதைகள், தட்சிணாமூர்த்தி, பைரவர், செந்தில் ஆண்டவர், 63 - நாயன்மார்கள், பஞ்சலிங்கம், கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம், சனீஸ்வரர், வெளி பிரகார கோஷ்ட தேவதைகள், நைருதி வினாயகர், தண்டபாணி, விஷ்ணு துர்கை, சிவதுர்கை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தது. கும்பாபிஷேக பெருவிழாவும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

     நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி அவிநாசி, சேவூர், கருவலூர், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
    • திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.

    சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    • மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார்.
    • பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் அண்ணாமலையை வரவேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை வழிநெடுக கட்சி கொடி, தோரணங்கள் கட்டினர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்களும் வைத்தனர். திருப்பூர் அருகே உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அக்டோபர் மாதம் 19-ந்தேதி நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை 20-ந்தேதி திருப்பூரில் நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக 20-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. அண்ணாமலையை வரவேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.

    இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடைபயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.


    இதனிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி, அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடை பயணமும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் திருப்பூர் பா.ஜ.க.வினர் ஏமாற்றமடைந்தனர். இந்தநிலையில் அவர்கள் உற்சாகமடையும் வகையில் திருப்பூரில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர். மேலும் தமிழகமே உற்றுபார்க்கும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தோம். தற்போது பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டமே நடைபெற உள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளோம். தி.மு.க., அ.தி.மு.க. மாநாடுகளை வெல்லும் வகையில் பிரம்மாண்ட மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்தி காட்டுவோம். அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது மேலும் மேலும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    ×