என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

    அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
    • 2 பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு, பழனி, தாராபுரம், கோவை, பல்லடம், கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளும் திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர் ஊதியூர், குண்டடம், கொடுவாய் ஆகிய பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.

    நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விடியல் பேருந்து திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்வதற்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து காங்கேயம் வந்த டி.என். 39 என் 0659 என்ற எண் கொண்ட பேருந்தில் காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெண்கள் சிலர் ஏறி உள்ளனர். பின்னர் கண்டக்டரிடம் மெடிக்கல் ஸ்டாப்பில் இறங்க வேண்டுமென டிக்கெட் கேட்டுள்ளனர்.

    அதற்கு அந்தப்பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 ஸ்டாப் தானே உள்ளது, ஏன் நடந்து செல்ல முடியாதா? என அந்த பெண்களிடம் பேசியதுடன் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது, நேராக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றோம். அங்கு பயணச்சீட்டு பரிசோதனையாளரிடம் உங்களை விட்டு விடுகிறோம் , நீங்கள் எல்லாம் அபராதம் ரூ.500 கட்டினால் மட்டும்தான் திருந்துவீர்கள் என கூறியதுடன்,நேராக பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

    இதனால் கண்டக்டருக்கும், பெண் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழக அரசு, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என அறிவித்துள்ள நிலையில், நகரப்பேருந்துகளில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பெண்களிடம் இழிவாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே காங்கயத்தில் பெண் பயணிகளை இழிவாக பேசிய டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 2பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் 2பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
    • கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.

    பல்லடம்:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.

    இக்குழு சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.

    இதில் 2 மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கனிமொழி எம்.பி., பங்கேற்காததால் அமைச்சர்கள் முத்துசாமி ,கோவி.செழியன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மனுக்களை வாங்கி கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    • பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்?
    • மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் , மலைவாழ் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடுமலை அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    மருத்துவமனைக்குட்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, உணவு தயாரிக்கும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காயம் அடைந்தவருக்கு செவிலியர் சிகிச்சை அளிக்காமல் மருத்துவ பணியாளர் சிகிச்சை அளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே செவிலியரை அழைத்து அறிவுரைகள் கூறி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது குறித்து மாவட்ட மருத்துவ இயக்குனரிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்? அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவசர சிகிச்சை பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் ஏன் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையை நீங்கள் ஆய்வு செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு முன்புறம் ஏன் வீல் சேர் வைக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    உடுமலை அருகே நேற்றிரவு சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வாலிபர்கள் 2பேரை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கார்த்திக்குமார், கருப்புசாமி ஆகியோர் மானுப்பட்டி பகுதியில் மோட்டார் வயர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார்.
    • இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி, பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் இருந்து ¼ கிலோ கஞ்சா மற்றும் சிகரெட்டுகள், பணத்தை வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்தார். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார். இது தொடர்பாக இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி மாணவரிடம் கஞ்சா எப்படி வந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். மாணவ சமுதாயத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் எனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
    • திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் இ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தொடர் கோரிக்கையால் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்தார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி தொடர் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருக்கப்போகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.

    • தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது.

    திருப்பூர்:

    சைவம், அசைவம் என எந்த வகை உணவுகள் தயாரித்தாலும் முதன்மை இடத்தை தக்காளிகள் பெறுகின்றன. இதனால் தக்காளியின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

    இதைக்கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு சாலையோரங்களில் வீசும் அவலமும் ஏற்பட்டு வந்தது.

    தற்போது திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வீதிகளில் வீசப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருப்பூரை பொறுத்தவரை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தரத்துக்கு ஏற்ப 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி அழுகி விடுகின்றன.

    விலை வீழ்ச்சியை சந்தித்ததால் அந்த தக்காளிகளை கூடை, கூடையாக மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இன்னும் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    அவினாசி:

    அவினாசி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி, அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பிராக்கியாபாளையம், சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், மடத்துப்பாளையம், சேயூர் சாலை, வ.உ.சி. குடியிருப்பு, கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு ரதவீதிகள், அவினாசி கைக்காட்டி புதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ்.பி. அப்பேரல் மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.

    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
    • கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

    அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.

    இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

    திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,

    அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

    இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,

    அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-

    இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-

    திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

    திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-

    கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-

    திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.

    அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
    • முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி முத்துநகர், மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷேரீப், ஷோகாக், லீட்டன், ரகீர் ஆகியோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×