என் மலர்
திருநெல்வேலி
- ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
- பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் நிலையான குழுக்களும் சோதனை சாவடி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு நிலையான குழுவினர் அதன் அதிகாரி செல்லத்துரை தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.62 ஆயிரத்து 400 பணம் இருந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்த பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, பத்தமடை பகுதியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், அதற்கான மாத ஊதியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.
- தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.
இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
நெல்லை:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் விசுவாசம் என்ற 87 வயது முதியவர் வீட்டிற்கு நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12-டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்
மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது.
மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
- அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.
அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
- வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தினால் வாரந் தோறும் திங்கள் கிழமை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்தார்.
அதே நேரத்தில் கோரிக்கை தொடர்பாக பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்களை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரக்கூடும் என்பதால் வாசலில் இருந்த மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் மனு பெட்டியினை தூக்கி வைத்து நகரக்கூடிய நாற்காலியை தள்ளி சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் கர காட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் உள்பட அனைவரும் சேர்ந்து காரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
- நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
- 2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1952, 1957, 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தாணுபிள்ளை பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி கண்டார். இதேபோல் 2009-ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார்.

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்.
2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.
2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
- தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம், நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலின வாக்காளர்கள் 152 பேர் அடங்குவர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளது. தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
100 வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் உள்ளனர். தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 13 வாக்குச்சாவடிகள் கவனிக்கத்தக்கதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
இந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 203 பேரும் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 126 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டயறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 8,873 பேரும், முதல் தலைமுறை வாக்காளர்கள் 22 ஆயிரத்து 492 பேரும் உள்ளனர்.
- சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
- குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.
உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
- கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
- சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.
- சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.
அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.






