என் மலர்
திருநெல்வேலி
- மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 134½ அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 137½ அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107½ அடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் மணிமுத்தாறு அணையில் 80 அடியும், பாபநாசத்தில் 88½ அடியும், சேர்வலாறு அணையில் 88 அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே கனமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டிடும் நிலையில் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார எஸ்டேட்டுகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துவிட்ட நிலையிலும் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.
இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது. இதனால் கேரளாவில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், சூரன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்தி நகரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வரும் ஜேம்ஸ் பால் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளார். இதனால் ஜேம்ஸ் பால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால், தனது பக்கத்து வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
- மிக கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 0462- 2501070, 9786566111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகிறது.
மேலும், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.
நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
- மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
நெல்லை:
நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடு, மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 'ஆதி நீயே, ஆழித்தாயே' என்ற முழக்கத்தை முன்வைத்து கடலம்மா என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் இந்த கடலம்மா மாநாடு சீமானின் மற்ற மாநாடுகளை போல சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
- பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலை இருக்கிறது.
- பிரதமர் மோடி நேற்று கோவையில் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார்.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் 4 கொலைகள் நடந்திருக்கிறது.
கடந்த ஆட்சியை விட குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கற்பழிப்பு சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவற்றில் தான் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலை இருக்கிறது. சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக சேதப்படுத்தப்பட்டு கிடக்கிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று கோவையில் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார். இருந்தபோதிலும் பிரதமர் மீது குற்றம் குறை கூறி வருகின்றனர்.
கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. மாறாக திருப்பி அனுப்ப கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டத்தை கோவை பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை.
திட்டத்திற்கான விரிவான அறிக்கையை திருப்பி அனுப்ப அறிவுறுத்தி உள்ளது. கோவையில் ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த வேலையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கருப்பு கொடி காட்டுகிறார்கள். அமெரிக்க அதிபரையே வந்து பார் என்று கூறுபவர் பிரதமர் மோடி. அவரால் முடியாதது எதுவுமில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது.
* தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
* தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
- தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வர்த்தக மையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி தான் முடிவுகளை எடுப்பார். பா.ஜ.க. மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். சமூக, சமுதாய அரசியல் அமைப்புகளும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
தமிழக வெற்றிக்கழகம் விரும்பினால் அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். தி.மு.க. வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இரட்டை வாக்களர்கள், போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். மூலம் செய்கிறது. இந்த பணியை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். பீகார் தேர்தல் முடிவு தான் தமிழகத்திலும் வரும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்.
பா.ஜ.க. தேசத்தை பாதுகாப்பதாக உள்ளது. தேச பக்தராக அ.தி.மு.க. உள்ளது. தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது.
- தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
நெல்லை:
வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே தி.மு.க.வினர் பேசியிருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க அரசு தான் தூண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பீகார் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும். விஜய், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைவார் என சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறார். அவர்களுடைய ஆசை நிறைவேறும். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும்.
கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்து இருக்கின்றன.
தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. தி.மு.க அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்காக தி.மு.க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை.
- எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர்.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பே.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் போராடுகிறார். இப்படி போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் என்று கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசி இருக்கிறார் விஜய்.
எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியாது.
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தால் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள்.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர். அதுபோன்று தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க.வுக்கு கிடையாது.
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. மத்திய அரசு உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தி இருக்கிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததாலேயே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
- மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செல வில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?.
பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?. ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






