என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர்.
    • கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூரில் பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதுதவிர விடுமுறை காலங்களில் அரசு போட்டித்தேர்வுகள் பெரும்பாலானவை இந்த கல்லூரியில் தான் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இங்கு என்ஜினீயரிங் படித்துவரும் உவரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய 'லெப்டோஸ்பை ரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர். அதில் அவர்களுக்கும் எலிக்காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கல்லூரியில் அதிரடி ஆய்வு நடத்தியதில், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவு தயாரிப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.

    இதனிடையே நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் இருந்ததும், கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுக்கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் கூறியதாவது:-

    கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாட்டினால் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கல்லூரியில் சுகாதார பணிகள் மேற்கொண்டு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரியை திறக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்கப்படும் என மாணவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சுகாதார பணிகள் முடிந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வித குளோரினேசனும் செய்யவில்லை. எனவே உடனடியாக வெளியில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்க வேண்டும். இல்லையெனில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கல்லூரிக்கு செல்லும் குடிநீர் பைப் இணைப்புகள் தாசில்தார் மேற்பார்வையில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
    • விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. 41 பேரை அடித்து கொன்றார்கள், மிதித்து கொன்றார்கள். தள்ளுமுள்ளுவை சாக்காக வைத்து விஜயை காலி செய்து விட்டால் என்ன செய்வது?

    விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது என்றார்.

    நயினார் நாகேந்திரனின் பேச்சு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நயினார் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் அ.தி.மு.க. கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்.

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும்.

    திண்டுக்கல்லில் நீட் தேர்வில் மாணவி ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்னும் அதை செய்யவில்லை. இப்போது நீட் தேர்விலேயே வந்து நிற்கிறார்கள். நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைக்கும். மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

    எந்த கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறுகிறார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.

    வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பணி செய்து வருவதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுப்பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் த.வெ.க கொடி பா.ஜ.க. கூட்டத்தில் எப்போது பறக்கும் என்று கேட்ட கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் முத்து பலவேசம், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
    • தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.

    சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.

    * நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.

    * தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    * தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
    • பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    • பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
    • வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
    • இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர் தன்னை அவதூறாக பேசிய மாணவரை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்கச் சென்ற இன்னொரு மாணவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரை பைக்குள் அரிவாளை மறைத்து கொண்டு வந்து சக மாணவர் வெட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர், அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு அவர்களால் அன்போடு சின்னையா என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டுவதற்கு உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த நான், முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பொதுமக்களும் கலந்து கொள்ளும் விதமாக மிகப்பெரிய விழாவாக நடத்தி எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பல்வேறு மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரிகை உலகை சேர்ந்தவருக்கு சிலை அமைத்த முதல் பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. இதே போல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவையும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்தார்.

    சி.பா. ஆதித்தனார் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான் என்ற பெருமை எங்களுக்கு எப்போதும் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
    • பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்லை:

    அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

    காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.

    வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.

    தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.

    ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    • தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை.
    • மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும்.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது.

    மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக பல செய்திகள் வந்துள்ளன.

    முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோ கால் வேறு. பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனத்துடனும் விஜய் இருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்குத் தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' பட பிரச்சனைக்காக 3 நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல.

    மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது. கவர்னர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம்.

    குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    பா.ம.க. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து சட்டமன்றம் கூடும்போது பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது.
    • நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் விஜயதாரணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக அனைத்து மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டு கட்டப்பட்டது, எய்ம்ஸ் கட்டப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களில் நாட்டின் உள்கட்டமைப்புகளை பன்மடங்காக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

    அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி என்பது மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டாலும் தேசிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களுக்கு அதன் பயன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒரு காலகட்டத்திற்கு பின்பு அதற்கான பார்வைகள் இன்று குறைத்துள்ளனர். இதனால் பெரிய பலன் மக்களை சென்றடைந்து இருக்கிறது.

    வரி குறைப்பு மூலம் பெரும்பாலான உணவுப் பொருட்கள் பூஜ்ஜியம் ஜி.எஸ்.டி. வரி என்று ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது உணவு பொருட்களுக்கு வரி இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.

    வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது. நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரியே இல்லாத பூஜ்ஜியம் என்ற நிலையை மோடி தலைமையிலான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தது வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. தலைவர் எதிரில் இருக்கும் அணி பிரிந்து இருக்கிறதா? சேர்ந்து இருக்கிறதா என்பதை அடிப்படையாக கொண்டு வெற்றி பெறலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களது ஆட்சியில் ஏதாவது நல்லது செய்திருக்கிறோமா? என்பதை சொல்லி வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி முகத்தை துடைத்து கொண்டு வந்ததை முகத்தை மூடிக் கொண்டு வந்ததாக தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

    அமித்ஷாவை சந்தித்து சால்வையை அணிவிக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. பிறகு ஏன் எடப்பாடி முகத்தை மூட வேண்டும்.

    திமு.க. கூட்டணியில் தினமும் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. மேலும் சில கட்சிகளும் இந்த கூட்டணியில் வந்து சேரும்.

    வருகிற டிசம்பர் மாதத்துக்குள் மிக வலிமையான கூட்டணியாக எழக்கூடிய 100 சதவீத சாத்திய கூறுகள் உள்ளன.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய பலத்தோடு சந்தித்து வெற்றி பெறுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள். நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அவர்களது கட்சியில் நாங்கள் எதுவும் தலையிட முடியாது என்றார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.
    • புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் அசோக்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த அசோக்குமார் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அசோக்குமார் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.

    இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

    சம்பவம் நடந்தபோது அசோக்குமாரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

    ×