என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சியை அடுத்த மண்ணச்ச நல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவரது மனைவி ஜெனினா (35). இந்த தம்பதிகளுக்கு 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் வடக்கிபட்டி அருகே ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (80) என்பவரது வீட்டில் கடந்த 2 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஏப்ரல் 29-ந் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே நேற்று ஜெனினா பச்சிளம் பெண் குழந்தையை வீட்டில் விட்டு வீட்டை பூட்டி அருகாமையில் உள்ள சர்ச்சுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

    ஜெனினா நடவடிக்கையில் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டின் உரிமையாளரான பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பெருமாளின் மருமகன் ராமன் (36) மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் துர்நாற்றம் வீசி உள்ளது.

    பின்னர் சந்தேகமடைந்த ராமன் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டின் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டி மூடி இருந்த நிலையில் அதில் இருந்து புழுக்கள் தென்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஜெனினாவை விசாரணை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் ஜெனினா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    பின்னர் ஜெனினாவை போலீசார் மடக்கி பிடித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 4 குழந்தைகளுக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதாகவும் 5-வதாக பிறந்த இந்த குழந்தைக்கு தானே பிரசவம் பார்த்ததாகவும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறினார்.

    மேலும் கணவர் சுரேஷ் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றதாலும் உதவி வேறு ஆட்கள் இல்லாததால் வீட்டின் உள் குழி தோண்டி பச்சிளம் குழந்தையை புதைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஜியபுரம் டி.எஸ்.பி. பழனி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை புதைத்த இடத்தை பார்வையிட்டார்.

    பின்னர் போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெனினா போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்தே பிறந்ததா? 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தை கொன்று புதைத்தாரா? அல்லது வேறு எதேனும் காரணத்தினால் குழந்தை இறந்ததா என தெரியவரும் என போலீசார் கூறினர்.

    • 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், தா பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல்கள் உடைத்து காசுகளை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ரவி, அறிவழகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணனூர் பாளையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த தமிழ்பாரதி(வயது 22), திருச்சியைச் சேர்ந்த சரவணன்(44) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு கோவில்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவர்களில் தமிழ்பாரதி 7-ம் வகுப்பு வரையும், சரவணன் 8-ம் வகுப்பு வரையுமே படித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை கையாள்வதில் கில்லாடியாக திகழ்ந்த அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் கோவில்கள் உள்ளது என்றும், காட்டுக்கோவில்கள் எங்கெங்கு உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

    பின்னர் கூகுள் மேப்பில் கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளின் படங்களை வைத்து, சிலைகளில் நகைகள் ஏதேனும் உள்ளதா என்று பதிவிட்ட புகைப்படங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழ்பாரதி, சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து திருடப்பட்ட நாணயங்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் தமிழ் பாரதி மீது அரியலூர் மாவட்ட பகுதிகளில் கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    7-ம் வகுப்பு படித்துவிட்டு செல்போன் அனுபவத்தால் கூகுள் மேப் மூலம் கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து திருடிய சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    • மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

    திருச்சி:

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்பில் இனி 30 சதவீதம் குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாற்றுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், சி.பி.எஸ்.இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. தேசிய கல்வி கொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார். 

    • பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார்.
    • தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு.

    திருச்சி:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு எப்பொழுது ஆரம்பிக்கும்? எப்பொழுது முடியும்? என தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றனர். பீகார் உள்பட 5 மாநில தேர்தல் வர இருக்கிறது. தேர்தல்கள் காலம் வரும்பொழுது இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

    இது அறிவிப்போடு இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் . தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார். தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

    திருச்சியில் நேற்று கூட 104 வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறோம். அந்த சமயத்தில் கடும் வெயில் இருந்தால் அது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அப்போது முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு. அப்படி வாங்க கூடாது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது கூறியுள்ளேன். 2009-ல் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் வைத்துள்ளோம்.

    அந்த கமிட்டி என்ன சொல்கிறதோ அவர்கள் நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறி உள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    தமிழக வெற்றிக்கழகம் 2026-ல் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது எனக் கூறியிருப்பது அவர்களது எண்ணம், கட்சி ஆரம்பித்து விட்டார்கள், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லுகிறார்கள் என நான் பார்க்கிறேன் . தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்துகின்றனர்.

    தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது மட்டுமல்லாமல், அதில் நிறைய ஷரத்துக்கள் உள்ளன. நாம் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என வைத்து உள்ளோம். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளில் தான் தேர்வுகள் வைக்கின்றோம்.

    ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் உள்ளன. இது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதும் ஒரு காரணம். குறிப்பாக நாம் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் போது அவர்கள் தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு கூறுகின்றனர். அது ஏற்கத்தக்கது அல்ல.

    ஆசிரியர் காலி பணியிடங்கள் பொறுத்தவரை நீங்கள் காத்திருப்பது போலவே நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது வந்தவுடன் அவர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் குருவிகளாக செல்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த இருந்த 16.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான போதை பொருட்களும் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் ரூ.9 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப் பொருளை தனது உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    • 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் திவ்யப்பிரியா (வயது31). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

    துறையூர் அசோக் நகரை சேர்ந்தவர் மகிசுகந்த் (31). இவர்கள் இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் மகிசுகந்த் தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறும் திவ்ய பிரியாவிடம் கேட்டார்.

    இதனை தொடர்ந்து அவர் ரூ. 1 லட்சத்து இருபதாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.5 லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மகிசுகந்திடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் வெளிநாடு சென்ற மகிசுகந்த் அங்கு தங்கி பணி புரியாமல் சில நாட்களிலேயே இந்தியா திரும்பினார்.

    இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திவ்யப்பிரியா, மகி சுகந்திடம் கேட்டார்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபிரியா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மகி சுகந்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் பெண் அதிகாரியிடம் நட்பாக பழகிய வாலிபர் நகை, பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.

    தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

    வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.

    நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்துள்ளார்.

    பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.

    இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் எதிர்ப்பையும் மீறி சொத்தை விற்பதற்காக கோபிநாத் ரூ.9 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.

    பிறகு, தாயிடம் பணத்தை தராமல் தானே வைத்துக் கொண்டு குடிபோதையில் கோபிநாத் திளைத்து வந்துள்ளார்.

    இதனால், ஆத்திரமடைந்த தாய் செல்வி கோடாலியால் கழுத்தை வெட்டி பின்னர் டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • இன்று 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.
    • மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் அங்குசாமி மனைவி மருதாம்பாள் (வயது 75) கோவிந்தராஜ் மனைவி லதா(52) மற்றும் நான்கு வயது சிறுமி பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

    மேலும் மின்னப்பன் தெரு மற்றும் சுற்றுவட்டார தெருக்களை சேர்ந்த 40 பேர் வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

    மேலும் வாந்தி-பேதிக்கு அந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி சித்திரை திருவிழா திருவிழாவில் அன்னதானத்தின் போது வழங்கிய மோர் காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அந்த பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.


    லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சந்தேகம் எழுப்பிய பகுதிகளில் குழிதோண்டி பார்த்த பின்னரும் கழிவு நீர் குடிநீரில் கலந்ததற்கான தடயம் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று கூறும்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்க தெரு, விண்ணப்ப தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் சப்ளை குழாய் மூலமாக வழங்க இருக்கிறோம்.

    அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகராட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

    • திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.

    தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

    வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.

    நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்தார்.

    பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த துணை போலீஸ் பிரண்டு சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெ க்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.

    இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறார்கள்.

    வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிய பட்டதாரி வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தா.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
    • முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×