search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட பெண் கல்லால் தாக்கி கொலை- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
    X
    கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்.

    கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட பெண் கல்லால் தாக்கி கொலை- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    • பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேர்வராயன். இவரது மகன் மாது (வயது 37). கூலி தொழிலாளி.

    மாதுவுக்கும், அதே ஊரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 52) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாது குடிபோதையில் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பதிலுக்கு பழனியம்மாள் அவரை சத்தம் போட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை உருவானது.

    தொடர்ந்து இருவரும் ஆபாசமான வார்த்தைகளை பேசி சண்டை போட்டனர். இதை கண்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு மாதுவிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கூறி விலக்கி விட்டனர். ஆனால் மாது அங்கிருந்து செல்லாமல் கோபத்தில் கல்லை எடுத்து பழனியம்மாளின் தலையில் தாக்கினார்.

    இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் குபு, குபுவென பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பலத்த காயம் ஏற்பட்ட பழனியம்மாளை மீட்டு அக்கம், பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி மாது வீட்டில் இல்லை. போலீசார் கைது செய்து விடுவார்கள் என கருதி அவர் தலைமறைவாகி விட்டார்.

    மாது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதனால் அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதுவிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மாது விரக்தி அடைந்தார். இதனால் மாது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த பழனியம்மாள், அந்த பெண்ணையும், மாதுவையும் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தால் பழனியம்மாளை மாது கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார், மாது மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×