search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

    • தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு மேற்கொண்டார்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணியில் காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்காக 7,918 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் தரத்திற்கு கீழே உள்ள போலீசாருக்கும் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் அவர்களும் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர்.

    மாவட்டத்தில் ஆண் தேர்வர்களுக்கு 8 மையங்களும், பெண் தேர்வர்களுக்கு 2 மையங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தது. காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் அனைவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு பின்னர் வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மையங்களில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 6,965 பேர் விண்ணப்பித்திருந்தனர். ேதர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

    தேர்வர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கருப்பு பந்துமுனை பேனா ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு நடைபெற்றதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள பள்ளியில் ஆய்வு செய்தார்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு மொத்தம் 5,270 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 7 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்காக சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மையங்களில் பார்வையிட்டு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ேதர்வர்கள் யாரும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    Next Story
    ×