என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் எண்ணத்தை யாரும் கணிக்க முடியாது. மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப வியூகங்கள் அமைத்தும் வேட்பாளர் தேர்வு செய்தும் , தேர்தல் பணியாற்றினால் வெற்றி பெறலாம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதால், சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி விட முடியாது.

    இன்னும் பல போர்க் களங்களை நாம் காண வேண்டியது உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். முதலில் நாம் காணவிருப்பது உள்ளாட்சி தேர்தல். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல். உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சபதம் ஏற்று பணியை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டால் 200 இடங்களில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப் பேற்பது உறுதி.


    தமிழகத்தைப் பொறுத்த வரை இந்திரா காந்தி காலத்தில் தி.மு.க.விடம் தொடங்கிய கூட்டணி தற்போது வரை வலிமையான கூட்டணியாக இருந்து வருகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். 

    இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். ஜனார்த்தனன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் பாண்டி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

    இதேபோன்று, இக்கோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டஞ்கச்சேரியில் திருவரங்குளம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியசெயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். பால சுப்பிர மணியன் வரவேற்றுப் பேசினார். 

    கூட்டத்தில் ஆலங்குடிக்கு தனிசெயல் அலுவலர் நியமிக்க வேண்டும், தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சிறு மின் விசை நீர்த் தேக்கத் தொட்டிகள் செயல் பட வில்லை. அவற்றைச் சரி செய்து முறையாகக் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். 
    நெடுவாசலில் போடப்பட்டுள்ள ஆழ்துணைக்கிணறுகளை அகற்ற வேண்டும். நீட் தேர்வைக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவைப் பாலை வனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் என்ற எந்தத்திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது. அப்படிக் கொண்டு வர நினைத்தால் அதைத் தடுக்க கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என்றும், 12-ம் தேதி கிழக்குக் கடற் கரைச் சாலையில் மக்கள் விரோதத் திட்டங்களைக் கண்டித்து மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

    முடிவில் தமிழரசன் நன்றி கூறினார்.
    கறம்பக்குடி அருகே மனைவியின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 40). இவரது மனைவி சுகுமாரி (32). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சுகுமாரி கறம்பக்குடியில் உள்ள அவரது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதைப்பார்த்த  அவரது கணவர் கலியமூர்த்தி திடீரென மோட்டார் சைக்கிளில் தீ வைத்து விட்டு சென்று விட்டார். இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    இச்சம்பவம் குறித்து சுகுமாரி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலியமூர்த்தியை கைது செய்தனர்.
    ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கல்லூரி முன்னாள் நிர்வாகியை 2 பேர் தாக்கியதால் அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). பாச்சிக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் பங்குதாரரான இவர், பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு தலைவராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மழையூரை சேர்ந்த குமார் மற்றும் கருப்பட்டிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் ஆகிய 2 பேரும் கணேசனை தாக்கியுள்ளனர்.

    பொது இடத்தில் வைத்து தாக்கியதால் அவமான மடைந்த கணேசன் வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொது மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, மணமேல்குடி, இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 140 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே அரசின் உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 10-க்கும் குறைவான பார்களேஅரசின் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.

    பிற டாஸ்மாக் கடைகளின் அருகே தற்போது தமிழக அரசின் உரிமம் இன்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு உரிமம் இன்றி செயல்படும் பார்களால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1 கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு உரிமம் இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அதிகாலை முதல் இரவு வரை நேரடியாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று 2-வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முதல் முறையாக கடந்த மாதம் (மே) 3-ந் தேதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், வடக்கு ராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.
    அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சனையை எதிர்க் கட்சியினர் பார்த்துக்கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய போவதை இது காட்டுகிறது.


    கட்சி, இயக்கம், அமைப்பு என்றாலே இதுவரை ஒரு தலைமை மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது. இரட்டை தலைமை என்பது ஒத்து வராது. தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகாவில் மேகதாது அணை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் என்று கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராகுல்காந்தி மீது பழியை போடுகிறார்.

    தமிழகத்தில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வேதனை அடையச் செய்துள்ளது. ஆணைய உத்தரவுப்படி 9 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை, மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.

    அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆட்சியை கலைத்தாலும் புதுச்சேரியில் செயல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தமிழக முதல்வர் இந்த வி‌ஷயத்தில் மெளனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழிச்சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கறம்பக்குடியில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரியபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மனைவி ஹபீசா. இவர்களது மகள் நஜ்மா (வயது 19). இவருக்குதிருமணமாகி விட்டது. கணவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நஜ்மா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். 

    இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    திருச்சி-புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.

    கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. கீரனூரை அடுத்த உறவிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டு இருந்தபோது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.

    மேலப்புது வயலை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சங்கரன் (வயது 45) பலத்த இடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். கண்ணங்குடியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியதாஸ் (49) மற்றும் மலர் (47), வசந்தா (45) ஆகிய 3 பேரும் காயம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால், ஆரோக்கியதாஸ் உள்பட 3 பேரும் கட்டிடத்தின் அருகே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மலர், வசந்தா இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதே போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 30 நிமிடம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுக்கோட்டை வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ‘நீட்’ தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராது இருக்க வேண்டும்.

    இந்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை மற்றும் மற்ற மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். இந்த அமைப்பு அதிகாரமில்லாத அமைப்பு. இதனை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பி உள்ளார். அதுகுறித்து பரிசீலனை செய்வேன்.


    தற்போதைய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தினம் தினம் எங்கள் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் போராடி போராடியே மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். அவரது போக்கு மாறவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கவர்னர் கிரண்பேடி அமைதியாக உள்ளார் என்றார்.

    பின்னர் அவரிடம் புதுச்சேரி கவர்னராக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமி நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த அவர், புதுச்சேரி கவர்னராக சுப்ரமணிய சாமியை முதலில் மத்திய அரசு நியமிக்கட்டும். அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன். இந்தி திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இருமொழிக் கொள்கை தான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.
    பொன்னமராவதி அருகே போலீஸ் ஏட்டு மகன் மர்ம முறையில் வாய்க்காலில் இறந்து கிடந்துள்ளார்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி பாரதிநகரை சேர்ந்தவர் ஆண்டி. இவர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கவியரசு(20). இவர் கடந்த ஆண்டு மே மாதம் இந்திய விமானப்படை காவலர் பணிக்கு தேர்வாகி மகாராஷ்டிரா மாநிலம் பெல்காமில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

    மலையேறும் பயிற்சியில் தடுமாறி விழுந்து மும்பை விமானப்படை மருத்துத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சிகிச்சை அளிப்பதாக அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு கூட்டி வந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு கடந்த 4-ந் தேதி கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றார். 

    மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடிப்பார்த்துள்ளனர். ஆனாலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் 5-ந் தேதி அதிகாலை பாரதிநகர் கிழக்கு பகுதியில் வையாபுரிப்பட்டி நரசினங் வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்த போது கவியரசு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த கவியரசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டையில் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கோவில் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி(வயது 38). இவர் இன்று காலை திருவப்பூர் பகுதியில் நடை பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள கடை வீதியில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் பாண்டியை வழிமறித்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.  ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுரேஷ் பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்து திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சுரேஷ் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்பாண்டி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
    ×