search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public roadblock"

    விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது படுகளாநத்தம் கிராமம். இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினி குடிநீர் தொட்டி ஆகியன மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து இந்த தொட்டிகளில் நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    எனவே அந்த பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர். இவர்களது போராட்டம் பற்றி அறிந்தும், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் இனியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    திருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூட தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சிவன் கோவில் தெரு அருகே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் அருகில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று ஊரின் மேற்குபுறம் உள்ள தெருக்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நேரமாக இருந்ததால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினருடன் ஒன்று சேர்ந்து கோவிலூரில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி மக்கள் இந்த தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என்றும், ஒரு தனிப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தண்ணீர் இணைப்பு வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்றுக்குள் (அதாவது நேற்று) இந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்றும், மின்விளக்கு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் இணைப்பு செயல்பட்டு வருவதை நாளைக்குள் (அதாவது இன்று) சரி செய்து தருகிறோம் என்றும் உறுதியளித்தனர்.

    இதையடுத்து ஆழ்குழாயில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு சரிசெய்ய கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோனார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 3-வது வார்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோனார் தெருவிற்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அதிகாரிகளால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனே குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டும் கோனார் தெரு மக்கள் கையில் காலிக்குடங்களுடன் நேற்று திடீரென்று திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், புதிதாக போர்வெல் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி ஊராட்சி பெரியேரி பட்டி, ஆதிதிராவிடர் காலனி, தாண்டனூர், ஏரிக்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் தற்போது கடும் வறட்சி மற்றும் வெயில் காரணமாக, நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறு அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. எனவே இப்பகுதி மக்கள், மேட்டூர் காவிரி குடிநீரையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாத காலமாக காவிரி குடிநீரும் பெரியேரிபட்டி ஊராட்சி பகுதியில் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதன்காரணமாக இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்களும், ஆண்களும் காலிக்குடங்களுடன், ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் அம்மன்கோவில்பட்டி பிரிவு ரோடு அருகே நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மோரனஅள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்டது மோரனஅள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 750 குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    போதிய மழை இல்லாத காரணத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால், ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இதுவரை தண்ணீர் வழங்கவில்லை.

    இதற்காக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டும், மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். மாமரங்களுக்கும் டிராக்டர் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    திருவாரூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் எடுத்து செல்லப்பட்ட எந்திரங்கள், லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவாரூர்:

    தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டது.

    இதனால் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்து அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு முதற் கட்டமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கியது. இதற்காக திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதிகளில் எந்திரங்கள், லாரிகளை நிறுத்தி வைத்திருந்தது.

    இந்நிலையில் சாலையை சீரமைக்காமல் ஒப்பந்த நிறுவனம் வாகனங்களை வேறு பணிகளுக்காக எடுத்து செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சீரமைத்தால் மட்டுமே வாகனங்களை செல்ல அனுமதிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி பர பரப்பாக காணப்பட்டது.
    சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    கோவில்பட்டி:

    எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. பின்னர் அதனை பழுது நீக்காமல், கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

    இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் வேலுச்சாமி, கிளை செயலாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், நகர செயலாளர் முருகன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    அவினாசி அருகே குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் காசிக்கவுண்டன் புதூர், கருணைபாளையம் கொடிக்காத்த குமரன் நகர், வி.பி.கார்டன், பாரதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீர், ஆழ்குழாய் தண்ணீர் எதுவும் கிடைப்பதில்லை.

    கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10 மணி அளவில் அவினாசி-மங்கலம் சாலையில் ராயன் கோவில் பிரிவு அருகே அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக 20 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குறைந்த அளவே கிடைக்கிறது. தெருவில் எந்த மின்விளக்குகளும் எரிவதில்லை, வருடகணக்கில் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே குவிந்து கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. குடி நீருக்காக காலை நேரத்தில் குடங்களை எடுத்துக்கொண்டு அவினாசிக்கு சென்றுவரவேண்டிய அவல நிலை உள்ளது.

    இதனால் எங்களது அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்களால் எந்த பயனும் இல்லை. எனவே தடையின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் ” என்று கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்திலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    முடிவில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், தெருவிளக்குகள் எரிவதற்கும், கழிவுநீர்கால்வாய்களை தூர்வாரவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 8 வார்டுகளும், இதன் துணை கிராமம் பாவளத்தில் 4 வார்டுகளும் உள்ளது.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவுபதியம்மன் கோவில், 4-வது வாய்க்கால், ஆற்றங்கரை, ஏரி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மேட்டுத்தெரு 12-வது வார்டு மற்றும் மேற்குத்தெரு 10-வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.30 மணி அளவில் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் காலை 7.15 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வி, கருணாநிதி ஆகியோர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் அப்பகுதியில் நேற்று மதியம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகேயுள்ள குதுப்பணம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து திண்டுக்கல்லுக்கு செல்லும் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஒரு திருகு குழாய் அமைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் நடந்து சென்று அதில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு கொடுத்தனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தொட்டணம்பட்டியில் உள்ள நல்லமனார்கோட்டை ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன், பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சிக்கனன், விவசாய சங்க தலைவர் பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    விருத்தாசலம் பூதாமூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூரில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வீதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.ஆர் நகர் பகுதியில் சிதம்பரம் விருத்தாசலம் மெயின் ரோட்டில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், தங்கம் நகர், பெருமாள் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நேரடி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பின் மூலம் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    நேரடி இணைப்பு என்பதால் அழுத்தம் தாங்காமல் குடிநீர் வரக்கூடிய குழாய் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது.

    ஆர்.கே.நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் பூதாமூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 8 மணியிலிருந்து 8.30 மணி வரை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குகுப்பணாபுரம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை அந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிர மணியம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனே அந்த பகுதியில் ஆழ்துளைகிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் திடீர் முற்றுகையால் சிவகாசி யூனியன் அலுவலகம் காலை 10¾ மணி முதல் 11¾ மணி வரை பரபரப்பாக காணப்பட்டது. 
    ×