என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணத்தை தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்.

    கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    அவரிடம் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என 13 கோடி ரூபாய்க்கு மேல் 305 நபர்கள் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை.

    பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
    • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது.
    • மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் கேசவரெட்டியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை ஓசூர் வந்தார்.

    பின்னர், அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:

    "பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மிகவும் அவசியம் மற்றும் இந்த பகுதி மக்களுக்கு அவசர தேவையாகும். இதனை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். எனவே, இரு மாநில மக்களின் அவசிய, அவசர தேவையை புரிந்து கொண்டு, தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து விரைவில், மெட்ரோ நீட்டிப்புக்கான உறுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் கண்டிப்புடன் பேசி, தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிப லிக்கும் அரசாக செயல்பட வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.

    மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன். அதனை நம்புகிறேன். "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை த.மா.கா. வரவேற்கிறது. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், த.மா.காவை பலப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது கேசவரெட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா? என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கியாசனூர் பாரஸ்ட் வன நோயால்(குரங்கு காய்ச்சல்), சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூர் ஆகிய மாவட்டத்தில், 53 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரி ழந்துள்ளதாக தெரிகிறது. மனிதர்களுக்கு இந்நோய் பாதிக்கப்பட்ட குரங்கின் உண்ணி கடி மூலம் பரவுகிறது. குறிப்பாக காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது சமீபத்தில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்கு பரவி, அவ்வழியே மனிதர்களுக்கும் நோய் பரவும்.

    ஆனால், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவாது. அத்துடன், உண்ணி கடித்த 3 முதல் 8 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

    பெரும்பாலோனோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள். சிலருக்கு இரண்டாம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். போதுமான அளவிற்கு நீர் ஆகாரம் வழங்க வேண்டும். மேலும், உண்ணி கடி ஏற்படாமல் இருக்க, முழு நீள ஆடைகளை அணிய வேண்டும். ஆடு, மாடு ஆகியவற்றுக்கு உண்ணி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கால்நடை துறையினரும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில், கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு, நோய் அறிகுறி உள்ளதா என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை என ஏற்கனவே 25.06.2023-ல் தெரிவித்துவிட்டோம்.
    • எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * பா.ஜனதாவுடன் இவர்கள் (அதிமுக) மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.

    * பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே 25.09.2023-ல் தலைமைக் கழகத்தில் இருந்து தெரிவித்துவிட்டோம்.

    * ஆனால் அதன்பின் ஐந்து மாதங்களாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    * உறுதியாக சொல்கிறோம்... இறுதியாக சொல்கிறோம். அதிமுக பா.ஜனதா கூட்டணியில் இல்லை. இல்லை.. இல்லை...

    * பத்திரிகையாளர், ஊடகங்களை சேர்ந்தவர்கள் இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்.

    * சரியான நேரத்தில் கூட்டணியை அமைப்போம்.

    * திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று சொன்னீர்கள். எங்கே முடிந்தது?. அந்த கூட்டணியில் இழுபறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

    * 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களை மீண்டும் கொடுக்க மறுக்கின்ற கட்சிதான் திமுக.

    * அந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும், இல்லை என்பது 10 நாட்களில் தெரிந்து விடும்.

    * திமுகவை பொறுத்தவரை கூட்டணியை நம்பி இருக்கிறது. மக்களை நம்பி இல்லை.

    * அதிமுக-வை பொறுத்தவரை மக்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவுதான் இறுதியானது. மக்கள்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் எஜமானர்களாக எண்ணுகின்றோம்.

    * வாக்களித்த மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அதற்காகத்தான் அதிமுக.

    • பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்:

    ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோர் இன்னும் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களை விடுவித்து, அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சென்று நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேசி தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
    • பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சேர்ந்த கோவி. செழியன், அப்துல்லா எம்.பி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் நேற்று வந்தனர்.

    ஓசூரில், தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த குழுவினர், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் 2 கருத்துகளை ஒரே மாதிரியாக பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை தெரிவித்து உள்ளனர்.

    மாநிலங்களுக்கு நிதி பகிர்வு வழங்குவதில் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக, தற்போது பிரதமராக உள்ள நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் இந்த விவகாரத்தில் போராட்டங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் என 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். 

    • கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
    • அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது.
    • உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது?

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11-ந் தேதி , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் விழா நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:-

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் வரவுள்ளார் ? என உலக தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தை பொறுத்த வரையில் யார் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர், உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது ? என்பதை தெளிவுபடுத்துகிற தேர்தலாக, இந்த தேர்தல் உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாம் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற பொது தேர்தல், இந்த பொதுத் தேர்தலில் இந்திய அளவில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு பக்கம் நிற்கிறது. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி ஒரு பக்கமும், இந்த இரண்டு கூட்டணிகளையும் தவிர்த்து தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை தாருங்கள், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நாம் ஒரு மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    • திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.

    200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
    • பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.

    ×