search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி தென்படுகிறதா என கண்காணிப்பு- கலெக்டர் அறிக்கை
    X

    குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி தென்படுகிறதா என கண்காணிப்பு- கலெக்டர் அறிக்கை

    • நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா? என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கியாசனூர் பாரஸ்ட் வன நோயால்(குரங்கு காய்ச்சல்), சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூர் ஆகிய மாவட்டத்தில், 53 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரி ழந்துள்ளதாக தெரிகிறது. மனிதர்களுக்கு இந்நோய் பாதிக்கப்பட்ட குரங்கின் உண்ணி கடி மூலம் பரவுகிறது. குறிப்பாக காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது சமீபத்தில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்கு பரவி, அவ்வழியே மனிதர்களுக்கும் நோய் பரவும்.

    ஆனால், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவாது. அத்துடன், உண்ணி கடித்த 3 முதல் 8 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

    பெரும்பாலோனோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள். சிலருக்கு இரண்டாம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். போதுமான அளவிற்கு நீர் ஆகாரம் வழங்க வேண்டும். மேலும், உண்ணி கடி ஏற்படாமல் இருக்க, முழு நீள ஆடைகளை அணிய வேண்டும். ஆடு, மாடு ஆகியவற்றுக்கு உண்ணி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கால்நடை துறையினரும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில், கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு, நோய் அறிகுறி உள்ளதா என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×