என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருப்போரூர்:

    புதுச்சேரி பந்துரெட்டி புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24).

    நேற்று இரவு தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க .தலைமையிலான கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இது கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிக்கொண்டே வந்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி ஆட்சி தொடரும.

    தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதினாலே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது திடீரென்று வந்தது இல்லை. இன்னும் வருகிற காலங்களில் அதிகமான வறட்சி ஏற்படும், வெள்ளமும் வரலாம். ஆட்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இது ஒரு ஐம்பது ஆண்டுகால பிரச்சனை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும். முக்கியமாக கோதாவரி காவிரி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் அப்பொழுது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


    நாங்கள் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை எப்பொழுதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்.

    நாங்கள் கூட்டணிக்குள்ளே இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை-புறநகர் பகுதியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை காலம் அமலில் இருக்கிறது.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1000, வவ்வால் ரூ. 750, சங்கராரூ. 350, நண்டு ரூ. 300, இறால் ரூ. 400, பாறை ரூ. 800, கடமா ரூ. 400, அயிலை ரூ. 300 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதை சரி செய்யும் வகையில் கேரளா, ஆந்திரா, ஓடிசா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மூலம் விலையை குறைத்து விற்பனையை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 45 நாட்கள் தடைக்காலத்தை 61 நாட்களாக உயர்த்தியதால் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம், மரக்காணம் சுற்று வட்டார கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குரோம்பேட்டையை அருகே வாகனத்துக்கு வழிவிடும் தகராறில் பிளஸ்-2 மாணவரை குத்திக்கொலை செய்த பா.ஜனதா பிரமுகர்-மகன் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் (வயது16) தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 சேர்ந்து உள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கல்லூரி மாணவர் நந்தாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

    குரோம்பட்டை சி.எல்.சி. லைன் ரோட்டில் சென்ற போது முன்னாள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக விக்னேஷ், நந்தா ஆகியோருக்கும் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் அங்கேயே காத்திருந்தனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை வழிமறித்து மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக குத்தினர்.

    இதில் விக்னேசும், நந்தாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மதனையும், அவரது மகன் நித்தியானந்தத்தையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.

    இப்போது விக்னேஷ் இறந்ததால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மடிப்பாக்கம் அருகே 3 கிலோ கஞ்சாவுடன் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை காந்திநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது37). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவரது அட்டோவை நிறுத்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை  மற்றும்  பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரை அடுத்த கேசவராயன்பேட்டை, லட்சுமி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மேல்மருவத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் மகன் கடந்த மாதம் கோவில்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக பாலமுருகன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை பாலமுருகன் குடும்பத்துடன் திரும்பி வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைத்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    பாலமுருகன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை- பணத்தை சுருட்டி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து பாலமுருகன் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி பதிவு செய்து உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தார். அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை?.



    கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல். ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி.யின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை வந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து அ.தி.மு.க. எம்.பி.யிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

    பின்னர் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் ஒலிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

    பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    இத்திருவிழாவில் பெருமாள் சிம்மவாகனம், சே‌ஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை இரு வேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மேலும் பிரம் மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் கருடசேவை வருகிற 19-ந் தேதியும், திருத்தேர் விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) விமர்சையாக நடைபெற உள்ளது.

    வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.

    இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்திரவின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    காஞ்சீபுரத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளின் பார்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் காஞ்சீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்த காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை சாலியர் தெருமேட்டு தெரு நெல்லுக்காரதெரு பகுதியில் உள்ள பார் ஊழியர்கள் கிருபானந்தன், நாகராஜ், முருகன், பசுபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தாம்பரம்:

    பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.

    பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.

    நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

    மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    மாமல்லபுரம்:

    ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.

    அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    ×