search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் மாடு  முட்டி பந்தல் தொழிலாளி பலி
    X

    உடன்குடி பஜாரில் மாடுகள் சுற்றித்திரிவதை படத்தில் காணலாம்.

    உடன்குடியில் மாடு முட்டி பந்தல் தொழிலாளி பலி

    • ஒரு மாடு எதிரே வந்ததால் சுடலைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • மற்றொரு மாடு சாலையில் கிடந்த சுடலைமணியை கொம்புகளால் முட்டியது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஸ்டாலின்நகரை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 55). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் சுடலைமணி நேற்று இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் உடன்குடி பஜாருக்கு சென்றார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

    அவர் சந்தையடி ரோடு பகுதியில் வந்தபோது சாலையில் ஏராளமான மாடுகள் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு எதிரே வந்ததால் சுடலைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அந்தநேரத்தில் மற்றொரு மாடு சாலையில் கிடந்த சுடலைமணியை கொம்புகளால் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குலசேகரன்பட்டினம் போலீசார் பலியான சுடலைமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, உடன்குடி பஜார் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சாலையில் மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

    பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து சென்றாலும் தொடர்ந்து அதே நிலை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×