என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள்.
    • அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வார்டு பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கணபதி ராஜ்குமார் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    25 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி என் பேச்சை கேட்டு ரசித்தார். பின்னர் தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறாய் என்று கேட்டார். நான் உறுப்பினராக கூட இல்லை என்று கூறினேன். தொடர்ந்து நோட்டு புத்தகத்தில் எனது பெயரை எழுதி உறுப்பினராக சேர்த்தவர் கருணாநிதி. எனவே கோவை மாவட்டத்தை என்னால் மறக்க முடியாது.

    வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அந்தளவுக்கு மக்கள் சார்ந்த மகத்தான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

    40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள். ஆனால் 50 ஆண்டுகாலமாக தலைவர் கட்டிக்காத்து வந்த தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி முதலமைச்சர் அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.

    உலகத்தில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியதுடன் நாணயம் வெளியிட மத்திய மந்திரியை வரவழைத்து அனைவரும் பெருமைப்படும் வகையில் முதலமைச்சர் செய்து காட்டினார். மத்திய அரசுடன் கொள்கையில் வேறுபட்டு இருந்தாலும் மு.க.ஸ்டாலின் அழைத்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேரடியாக வந்து நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டார்.

    ஆனால் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட மத்திய அரசின் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. சட்டசபையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்தை திறப்பதற்கு மத்திய அமைச்சரை எடப்பாடி பழனிசாமி அழைத்தபோது அவர்கள் வரவில்லை. ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.

    எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒட்ட வைக்க முடியாது. ஆனால் தி.மு.க. அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் பற்றிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசியதை பெரிதாகி பிரச்சனை ஆக்கினார்கள். நகைச்சுவையை, பகைச்சுவையாக்கி பார்த்தார்கள். அமைச்சர் துரைமுருகனும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்த பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. ஆனால் அ.தி.மு.க-பா.ஜ.க.வின் மோதல் என்பது ஒட்ட முடியாத சண்டை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
    • விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து ஒருங்கிணைந்த சேவை மைய குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது இந்த குழுவினரிடம், கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள், இந்த கல்லூரியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்.சி.சி மாஸ்டர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான குழுவினர் நேராக வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து, புகார் அளித்தனர். புகாரின் பேரில் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி.
    • விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி. அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.

    கோவை:

    காரமடை சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களை சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் இருந்து விமானம் மூலம் சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து சென்று வருகிறார்.

    அதன்படி இந்தாண்டு 200 மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ள ஞானசேகரன், முதல்கட்டமாக இருமுறை தலா 50 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவர்கள் காலை உணவுக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலம் அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் ஞானசேகரன் அடுத்தகட்டமாக அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கோவை விமான நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சென்னைக்கு விமானத்தில் பறந்தனர்.

    முன்னதாக சென்னைக்கு விமானத்தில் செல்வது குறித்து மாணவிகள் கூறுகையில், இதுவரை தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை வெறும் கண்களில் மட்டுமே பார்த்து உள்ளோம்.

    ஆனால் ஊராட்சித்தலைவர் உதவியால் நாங்களும் விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி என்று தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
    • அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, "கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

    ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும்.

    கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன்" என்று பேசினார்.

    கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாகவில்லை எனவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன.
    • ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும்.

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச். ராஜா நடிகர் விஜயை தான் விமர்சிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் நடிகர் விஜயை விமர்சிக்கவே இல்லை. அவர் தன்னோட மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் விமர்சித்தேன். நாடு முழுக்க கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏழைகள் கல்வி கற்க அரசு பள்ளிகளில் கல்வி இலவசம். நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது."

    "மலேசியா, சிங்கப்பூரில் நம் நாட்டில் இருப்பது போல் எளிதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமா. ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும். எனவே அங்கு இலவசமாக இருக்கிறது, இங்கு இலவசமாக இல்லை என்று சொன்ன பொய்க்கு எதிராக நான் அறிக்கை கொடுத்திருந்தேன்."

    "நான் விஜய்-க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட பொய், அதை உண்மை என நம்பவைக்க முயற்சித்ததை பன்ச்சர் செய்திருப்போம். அவ்வளவு தான். விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது, நான் வாருங்கள் என்று கூறிவிட்டேன். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மக்கள் பணி செய்யும் உரிமை இருக்கு, அவர் செய்கிறார். தற்போது கோவிலுக்கு சென்றிருக்கிறார், வரவேற்கிறோம். நான் அவர் கட்சி ஆரம்பிக்கும் போதே வரவேற்றிருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.
    • அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை.

    கோவை:

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐரோப்பியாவில் கண்டறியப்பட்ட குரங்கம்மையானது தற்போது உலகம் முழுவதும் 121 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து உலகில் குரங்கம்மை என்ற நோய் பரவி வருவதால் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

    அதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கம்மை தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் தனி வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    குரங்கம்மை பாதிப்பு யாருக்காவது கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் காய்ச்சல் பரிசோதனையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

    குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.

    இதுமட்டுமின்றி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 10 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் முதல்வன் மருந்தகம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அதன்படி வருகிற பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் 1000 முதல்வன் மருந்தகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை:

    கோவை ரெயில் நிலையம் அருகே ரெயில்பெட்டியை கொண்டு புதிய ஓட்டல் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் நேற்றுமுன்தினம் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

    அரை மணி நேரத்தில் 6 பிளேட் பிரியாணியை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் 4 பிளேட் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பு காரணமாக போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் ஓட்டல் முன்பு திரண்டனர். அவர்கள் வந்த வாகனமும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி நகர் முழுவதும் எதிரொலித்தது.

    இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.

    இந்தநிலையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மேலாளர் கணேஷ் என்பவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுமதியின்றி போட்டியை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜாதிக்காய் சாகுபடி செய்வது குறித்து ஜாதிக்காய் விவசாயி ரசூல் மொய்தீன் பகிர்ந்துள்ளார்.
    • அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    விவசாயத்தில் தெளிவான திட்டமிடலும், புரிதலும் இருந்தால் ஜாதிக்காயிலும் சாதிக்கலாம் என நிருபித்திருக்கிறார் திண்டுக்கல் விவசாயி ரசூல் மொய்தீன்.

    சமவெளியில் மரவாசனை பயிர்கள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்பவர்களின் கருத்தை பொய்யாக்கியுள்ளது இவருடைய குறுங்காடு.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவரின் 100 ஏக்கர் நிலம். அங்கு ஆயிரக்கணக்கில் தென்னை மரங்கள் வளர்ந்து நிறைந்துள்ளன. அங்கு, நான்கு தென்னைக்கு நடுவே ஒரு ஜாதிக்காய் மரம் வைத்துள்ளார்.

    சமவெளியில் ஜாதிக்காயை வைத்து பார்ப்போமே என்ற நம்பிக்கையில் ஆரம்பத்தில் தொடங்கியுள்ளார். ஆனால் வளர்த்த பின் பிரதான பயிரான தென்னையை விடவும் ஊடுபயிரான ஜாதிக்காயில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    பல அடுக்கு சாகுபடி முறையில் ஒரு குறுங்காட்டையே உருவாக்கியிருக்கும் ரசூல் அவர்களிடம் இந்த ஜாதிக்காய் மரங்களை எப்படி பராமரிக்கிறீர்கள் என கேட்ட போது,

    "பொதுவாகவே ஜாதிக்காய் மரங்கள் 6ம் வருடத்திலிருந்து காய்ப்புக்கு வரும். ஆண்டு கூடக் கூட அதனுடைய காய் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    என்னுடைய பிரதான பயிரான தென்னையில் ஒரு மரத்திலிருந்து ரூ.300/- கிடைப்பதே அதிகம் என்ற நிலையில், ஒரு ஜாதிக்காய் மரத்திலிருந்து ரூ.3,000/- முதல் ரூ.5,000/- வரை கிடைக்கிறது.

    அதிலும் குறிப்பாக எந்த செலவுமின்றி கிடைக்கிறது. இந்த மரத்திற்கென்று எந்த பிரத்தியேக பராமரிப்பும் தேவையில்லை. எந்தவிதமான பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை.

    மாறாக மகசூலை அதிகரிக்க மட்டும் அவ்வப்போது எள்ளு புண்ணாக்கு , இதர புண்ணாக்குகள் மற்றும் மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஜாதிக்காயால் செலவில்லை, வருவாய் அதிகம் மற்றும் நிலமும் சுத்தமாக இருக்கிறது" என்றார்.

    ஜாதிக்காயை சாகுப்படி செய்து அவர் அதை எப்படி சந்தைப்படுத்துகிறார் எனக் கேட்ட போது,"பொதுவாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்து விடுவார்கள். ஆனால் அதை விற்பனை செய்யும் போது ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கமிஷன் அடிப்படையில் உற்பத்தியை கொடுத்து விடுவார்கள்.

    கமிஷன் அடிப்படையில் கொடுக்கிறபோது, அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்கும் சூழல் வரும். பொதுவாக தக்காளி, உருளை மற்றும் மாங்காய் போன்ற காய்கறிகளுக்கு இந்த சூழல் அடிக்கடி வரும்.

    ஆனால் ஜாதிக்காயை பொருத்தவரை அதன் தோல், கொட்டை மற்றும் பத்திரி இவற்றை பிரித்து காயவைத்து பராமரித்தால் விலை வரும் போது விற்றுக் கொள்ளலாம். இன்றே விற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காரணம் அது கெடும் பொருள் அல்ல, எனவே லாபம் வரும் போது விற்கலாம்" என்றார்.

    அதுமட்டுமின்றி இதன் நன்மைகள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், "திண்டுக்கல் மழை தடுக்கப்பட்ட மாவட்டம். சில சமயங்களில் 41 டிகிரி வெயில் கூட இருக்கும். ஆனாலும் என் மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சமவெளியிலும் மிக அழகாக காய்க்கின்றன. மேலும், இப்படி பல அடுக்கு முறையில் சாகுபடி செய்வதால் மற்ற நிலங்களை காட்டிலும் நம் நிலம் கூடுதல் குளுமையாக ஈரப்பதத்துடன் இருக்கிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வது அவர்களின் வருவாயை அதிகரிக்கும். குறிப்பாக ஜாதிக்காய் பயிரிடுவதால் ஏராளமான லாபமும் நன்மையும் இருக்கிறது" எனக் கூறினார்.

    ஈஷா சார்பில் நடைபெறும் "சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் நடக்க உள்ளது.

    அதில் ரசூல் மொய்தீன் அவர்கள் ஜாதிக்காய் சாகுபடி குறித்த இன்னும் பல பயனுள்ள தகவல்களை நேரில் பகிர இருக்கிறார். இவரை போலவே இன்னும் பல வெற்றி விவசாயிகள் சமவெளியில் மரவாசனைப் பயிர்களை வளர்க்கும் உத்திகளை, முறைகளை விளக்கி சொல்ல உள்ளனர்.

    மேலும், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகரில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 18 கார்களில் வந்தவர்கள் உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பு தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பார்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மது கூடத்திற்கு மது அருந்த வருவோர், கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய பார் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது அருந்த பார்களுக்கு வருபவர்கள், வேறு போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனரா? என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

    பார்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன் மதுக்கூட உரிமமும் ரத்து செய்யப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

    இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

    அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம்.
    • பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆன்மிக பூமி அப்போது அவர் கூறியதாவது:-

    பழனியில் இன்று நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

    தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என காந்தி கூறியது போல பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இவர்கள் அண்ணாவின் தமிழை பின்பற்றும் இவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

    நடிகர் விஜயின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மரமா என தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துகளை சொல்கிறார்கள். தம்பி விஜய் சட்டரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

    பா.ஜ.க., திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.

    அ.தி.மு.க.வால் பா.ஜனதா வெற்றி பெற்றதா? அல்லது பா.ஜனதாவால் அ.தி.மு.க வெற்றி பெற்றதா? என்றால் அது பெரிய விவாதம்.

    கூட்டணி என வரும் போது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது.

    இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.

    பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிகல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
    • பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு காவல் பணிக்கு தனியார் செக்யூரிட்டி மூலம் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரி நுழைவுவாயில், பல்வேறு சிகிச்சை பிரிவு வார்டுகள், அரங்குகள் உள்பட பல்வேறு இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காவலர்கள் தங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவது போன்று சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஒப்பந்த காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களை அரசு மருத்துவமனை உள் மருத்துவ அலுவலர் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை கடிதமாக எழுதி தாருங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×