அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதல் ஒட்ட முடியாத சண்டை... திண்டுக்கல் லியோனி தாக்கு

40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள்.அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதல் ஒட்ட முடியாத சண்டை... திண்டுக்கல் லியோனி தாக்கு
Published on

கோவை:

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வார்டு பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கணபதி ராஜ்குமார் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி என் பேச்சை கேட்டு ரசித்தார். பின்னர் தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறாய் என்று கேட்டார். நான் உறுப்பினராக கூட இல்லை என்று கூறினேன். தொடர்ந்து நோட்டு புத்தகத்தில் எனது பெயரை எழுதி உறுப்பினராக சேர்த்தவர் கருணாநிதி. எனவே கோவை மாவட்டத்தை என்னால் மறக்க முடியாது.

வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அந்தளவுக்கு மக்கள் சார்ந்த மகத்தான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்-, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காணாமல் போக செய்துவிட்டார்கள். ஆனால் 50 ஆண்டுகாலமாக தலைவர் கட்டிக்காத்து வந்த தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி முதலமைச்சர் அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.

உலகத்தில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியதுடன் நாணயம் வெளியிட மத்திய மந்திரியை வரவழைத்து அனைவரும் பெருமைப்படும் வகையில் முதலமைச்சர் செய்து காட்டினார். மத்திய அரசுடன் கொள்கையில் வேறுபட்டு இருந்தாலும் மு.க.ஸ்டாலின் அழைத்ததும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேரடியாக வந்து நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டார்.

ஆனால் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட மத்திய அரசின் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. சட்டசபையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்தை திறப்பதற்கு மத்திய அமைச்சரை எடப்பாடி பழனிசாமி அழைத்தபோது அவர்கள் வரவில்லை. ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்பவர் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒட்ட வைக்க முடியாது. ஆனால் தி.மு.க. அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் பற்றிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசியதை பெரிதாகி பிரச்சனை ஆக்கினார்கள். நகைச்சுவையை, பகைச்சுவையாக்கி பார்த்தார்கள். அமைச்சர் துரைமுருகனும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்த பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. ஆனால் அ.தி.மு.க-பா.ஜ.க.வின் மோதல் என்பது ஒட்ட முடியாத சண்டை.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com