என் மலர்
கோயம்புத்தூர்
- தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
- பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் இதுபோன்ற விஷயங்களில் மக்களை திசை திருப்புவதை விட்டு விட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.
தி.மு.க அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மதுரை முருகன் மாநாட்டை முன்னெடுத்து உள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை மதுரையில் நடத்துவது தான் சரியானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்ல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மோஹித் ஹரிஹரன் அதிரடியாக ஆடி 22 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கேப்டன் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 48 பந்தில் 77 ரன்னும், விஜய் சங்கர் 23 பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், ஜி.பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் 15 ரன்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அணியை கடைசி வரை நின்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 82 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை.
- சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும்.
கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேல்முருகன் கொச்சையாக பேசினார் என்றால் அது அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். யாரும் யாரையும் தரைக்குறைவாக பேசக்கூடாது.
பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை. அப்பா- மகன் இடையேயான அவர்களது சொந்த பிரச்சனை. அது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது. அவர்கள் பேசிக் தீர்த்துக் கொள்வார்கள்.
பாஜக ஆதரவாளர்கள், ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்கள் சமரசம் செய்ய சென்றார்கள் என்றால் அது அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருக்கிறார்கள். அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை.
சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடையே நோக்கமும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
- யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது.
வால்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நண்பர்கள் 2 பேரும் கொடுங்கலூரில் இருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு புறப்பட்டனர்.
அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர். ஆணகயா என்ற இடத்தில் வந்த போது சாலையில் யானைகள் கூட்டம் நின்றிருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டனர்.
சாலையில் நின்றிருந்த யானைகள் கூட்டம் திடீரென இவர்களை நோக்கி வேகமாக வந்தன.
இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை அந்தந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.
யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது. வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நடமாடிய யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். பின்னர் வாகனத்தையும் மீட்டனர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
யானைகள் கூட்டம் சாலையில் வழிமறித்து நிற்பதையும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவதையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2 தினங்களாக முலுக்கப்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லக்கூடிய சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கிறது. எனவே வனத்துறையினர் மிக கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கனரக வாகனங்களுக்கு பின்னால் சிறிய வாகனங்கள் வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கோவை:
நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேசன் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
- இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும்.
கோவை:
தனியார் யூடியூப் சேனலில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அந்தந்த மாவட்ட போலீசாரும் தாங்கள் செய்த வழக்குகளில் அவரை கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டன.
பழைய எப்.ஐ.ஆர்களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் கோவை சைபர் கிரைம் போலீசார் 15 வழக்குகளையும் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார், முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார், சாட்சியங்கள் என 130 பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் இதுவரை 129 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை நிறைவடைந்து விடும். விசாரணை முடிந்ததும் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றனர்.
- ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும்.
- சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
கோவை விமான நிலையத்தில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அது உதவும்.
மத்திய அரசு எவ்வளவு தந்து கொண்டிருக்கின்றது. அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. தமிழகம் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநரை பொறுத்தவரையில் மிக, மிக நேர்மையானவர்.
அவர் தன் கடமையை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்
தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதை காட்டிலும் கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரையில் இரு வேறு தீர்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றது. கேரளாவை பொறுத்தவரையில் கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை அனுமதிக்கும் அல்லது நியமிக்கின்ற முழுமையான அதிகாரம் இருப்பதாக சொல்லி இருந்தார்கள்.
இங்கு அது மாறான தீர்ப்பு வந்திருக்கின்றது. எனவே இது சட்ட வல்லுனர்களைக் கொண்டுதான் முறையாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள்.
நடிகர் கமல்ஹாசன் பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்கிறார்.
இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ, அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கிறவரை பற்றி என்னிடத்தில் எதற்கு கருத்து கேட்கிறீர்கள்.
பதவிக்காக அவர் அப்படி பேசி இருக்கிறார். இங்கே தீப்பற்றி எரிந்தாலும் அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக அவர் இருக்கிறார்.
சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா. அதுபோலத்தான் நாம் பேசுகின்ற போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி படைத்தவர்கள்.
முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு பாதுகாப்பு தருவது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
- சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பின்னர், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக, அவர் கோவையில் வீடு- வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசியதாவது:-
மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் முருகன் கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம். இந்த மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக- மனவேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக அமையும்.
நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும், மேல்சபை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்று உள்ளார்.
சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.
பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியை பெற்று உள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன்- தம்பிகள் பிரிவது சேருவது இயல்பு.
அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது.
கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
- 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோவையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்ததாக மதுரை பொதுக்குழுவில் திமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது
அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, யாருக்கும் எப்போதும் துரோகம் இழைத்ததில்லை. திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபேது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.
தூர்வாரப்படாததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாய் தூர்வாரப்படாதது அவர்களுக்கே பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னக்கல்லார், பெரிய கல்லார், ஈடியார், பண்ணிமேடு, சோலையார் அணை, சேக்கல்முடி, தலனார், கவர்கள், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி, சக்தி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
வால்பாறையில் உள்ள நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணலி எஸ்டேட் பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 12 செ.மீ, வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, வால்பாறை தாலுகாவில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-126, வால்பாறை பி.ஏ.பி-114, வால்பாறை தாலுகா-106, சின்கோனா-103, சோலையார்-95, சிறுவாணி அடிவாரம்-46, பொள்ளாச்சி தாலுகா-31, மாக்கினாம்பட்டி-37.
மழையால் சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 936 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது.
- நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது.
- நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் விழுந்துள்ளன. சில எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்கள் மரம் விழுந்து, அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
மழையால் வால்பாறையில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.
பொள்ளாச்சி நகரில் பெய்த கனமழைக்கு பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, கோவை சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் அந்த சாலைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
பொள்ளாச்சி நகராட்சி 33-வது வார்டில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது. நெகமத்தில் இருந்து பெரியபெட்டி செல்லும் ரோட்டில் என்.சந்திராபுரத்தில் உள்ள பழமையான மரம் வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெகமம் செட்டியாக்காபாளையம், கக்கடவு, காணியாலம்பாளையம் பகுதிகளில் மழைக்கு 3 வீடுகள் சேதம் அடைந்தன.






