என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் கனமழையால் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்.
வால்பாறையை மிரட்டும் கனமழை: மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் இருளில் மூழ்கிய 2 கிராமங்கள்
- கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னக்கல்லார், பெரிய கல்லார், ஈடியார், பண்ணிமேடு, சோலையார் அணை, சேக்கல்முடி, தலனார், கவர்கள், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி, சக்தி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
வால்பாறையில் உள்ள நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணலி எஸ்டேட் பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 12 செ.மீ, வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, வால்பாறை தாலுகாவில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-126, வால்பாறை பி.ஏ.பி-114, வால்பாறை தாலுகா-106, சின்கோனா-103, சோலையார்-95, சிறுவாணி அடிவாரம்-46, பொள்ளாச்சி தாலுகா-31, மாக்கினாம்பட்டி-37.
மழையால் சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 936 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது.






