என் மலர்tooltip icon

    சென்னை

    • 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
    • 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள்.

    மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள்.

    இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள்.

    வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
    • தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் கருத்தில் தெளிவு தேவை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

    தமிழ்நாடு பாஜக தலைவரும் மத்திய அரசால் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி மேலும் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது என அமித்ஷா கூறுகிறார்.

    Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

    எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும்.

    அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மத்திய பாஜக அரசு.
    • கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய கழகத் தலைவரும் முதலமைச்சருமான தலைவர் கலைஞர்தான்.

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. 'கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு' எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2024-ஆம் ஆண்டில் 528 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் கைதானார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் , திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பாஜக அரசு.

    தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசின் இயலாமையை மறைக்க ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார்.

    கச்சத்தீவு தொடர்பாகக் கழகத்தின் மீது வீண் அவதூறு பரப்பும் விஷமிகளுக்குக் கழக மூத்த முன்னோடிகளும், முதலமைச்சர் அவர்களும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டனர்.

    இருந்தாலும் எத்தனை விளக்கம் கூறினாலும் விளங்காத ஆளுநர் ரவிக்கு மீண்டும் சொல்கிறேன். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய கழகத் தலைவரும் முதலமைச்சருமான தலைவர் கலைஞர்தான்.

    அதோடு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியது திமுக. அதுமட்டுமல்லாது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அப்போதைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.

    இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும் ஆனால் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் ஆளுநர் ரவிக்கு இதெல்லாம் தெரியாதுதான்.

    கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு பற்றி ஒரு RTI ஆவணம் வெளியாகி உள்ளதாகச் சொல்லி புரளியைக் கிளப்பி குறளி வித்தை காட்டினார் அண்ணாமலை.

    அதனைப் பிரதமர் மோடி முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் வரை உண்மையாக்க முயன்றார்கள். கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோற்றுப் போனது.

    புஸ்வாணம் ஆன விவகாரத்தை இப்போது ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வந்து கலர் மத்தாப்பு காட்ட முயல்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது.

    தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப ஒன்றிய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி.

    1974-ல் போன கச்சத் தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி அவர் கண் முன்னே இந்தியாவின் 2000 சதுர கி.மீ பகுதிகள் சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார்.

    கடந்த மக்களவைத் தேர்தலில், 'அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி அரசு மீட்கும்' என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்? தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள்.

    நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி ஆளுநருக்கு நினைவு இருக்கிறதா? அப்படியான பதிலடியைத் தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும்.

    கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே! இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
    • தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.

    படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.

    தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.

    தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
    • Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இளைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார்.

    அப்போது, லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்," இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...

    ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

    அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

    உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், " முதல்வர் மு.க.ஸ்டாலின்

    அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!" என குறிப்பிட்டிருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.
    • இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    கச்சத்தீவை தாரை வார்த்து, அப்போதைய ஆட்சியாளர்கள் மீனவர்களுக்கு பெரும் பாவத்தை இழைத்துள்ளனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.

    நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன.

    அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
    • உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச் செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும். வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.

    நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். 



    • சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.
    • வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    சென்னை:

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    * ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக்கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது.

    * அரசே ஒரு மொழியை திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி.

    * சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும்.

    * தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது.

    * தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம்.

    * வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    * அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதா இல்லை.

    * இந்தியை படிக்க வேண்டும் என பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கானது என்றார். 

    • மாணவர்களின் வாழ்க்கையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
    • மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மார்ச் 3-ஆம் நாள் திங்கள்கிழமை தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3316 மையங்களில் எழுதும் 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும்.

    மாணவர்களின் வாழ்க்கையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 

    • கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை :

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
    • திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

    தமிழக வெற்றிக்கழகம் பெயரை கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா என தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

    இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக்க ழகத்தின் ஆதரவாளர்களாக சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலைய செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனவே அதிகாரப் பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான்.
    • விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் என்னிடம் உள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் சீமான் பேசுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என்று தி.மு.க. எம்பி கனிமொழி கூறி இருப்பது தொடர்பாகவும், பாலியல் வழக்கு குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

    தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கனிமொழி கூறியுள்ள கருத்துக்கள் என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் தொடங்கி பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வரை கனிமொழி இதுவரை கருத்துக்களை தெரிவிக்காதது ஏன்?

    இதுபோன்ற சூழலில் என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்.

    வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

    என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 'என்ஜாய் மென்ட் 'வித் அவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி' என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.

    அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்? இதற்கு கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு இரண்டு மூன்று சீட்டுகளுக்காக எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுக்கா மல் மவுனம் சாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது. இந்த நாட்டுக்கு அது தேவையான கட்சி தானா? திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான். தமிழகத்தில் திராவிட கூட்டத்தை தவிர வேறு யாரும் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே என்னை குறி வைத்துள்ளனர்.

    கூட்டணியில் இருப்பதால் மயிலிறகையும் மல்லிகை பூவையும் வைத்துக் கொண்டு வருடி விடும் வேலையைத்தான் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. கூட்டணியில் இருப்பதால் மீனவர் பிரச்சனைக்கும் ஆசிரியர்கள் பிரச்சனை என எந்த பிரச்சினையும் அவர்கள் குரல் கொடுப்பதே இல்லை.

    மும்மொழி கொள்கையில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாயில் புண் இருக்கிறதா? இல்லை புற்று பாதித்துள்ளதா? இப்படி இருந்து கொண்டு என்னை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

    கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டார்கள் என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்னையும் சவுமியா அன்புமணியையும் குஷ்புவையும் முன்கூட்டியே கைது செய்தனர்.

    அரசின் தவறை தட்டி கேட்கும் போராட்டம் அது என்பதாலேயே அதற்கு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கனிம வளங்கள் உள்ளே போவதை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி இயற்கை வளங்களை காக்க முடியாத அரசாகவே இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    ×