என் மலர்
சென்னை
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
- சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி தெளிவற்ற சூழல் நிலவும் நிலையில், இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை.
- பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு.
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.
த.வெ.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளதாக தவெகவின் நிர்வாகி அருண்ராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' படப் பிரச்னை மூலமாக பாஜக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மை யான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகக் வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்ல வில்லை. சமூக நீதி அடிப்ப டையில் செயல்படும் த.வெ.க. தான் சொல்லி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.
கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார். 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான்.
தி.மு.க. அவசர அவசரமாக தே.மு.தி.க. உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் தி.மு.க.விற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.
ஆளும் தி.மு.க.விற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பா.ஜ.க. பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகன் படம் நிறுத்தம், சி.பி.ஐ. விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என விஜய் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
- ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.
* பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.
* திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
* சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.
* மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.
* அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.
* மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.
* தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.
* ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
* தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.
* தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
- தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற் சங்க பொது செயலாளர் செல்வராசு-ஜெயந்தி மாலா மகள் சரண்யாவிற்கும், சென்னை ஓட்டேரியை சேர்ந்த சுப்பிரமணி-அருணாராணி மகன் ஈஸ்வருக்கும் நெய்வேலியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜயகாந்த் உழைப்பால் உயர்ந்தவர். அவரை மதிக்கிறேன். தமிழ்நாட்டை தி.மு.க. அழிக்கிறது என்ற கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தவர் விஜயகாந்த்.
அவர் உருவாக்கிய கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தோல்வி அடையும் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து உள்ளது வருத்தமாக இருக்கிறது.
வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர்.
தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது. மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது கூட கடன் வாங்கித்தான் கொடுத்தார்கள்.
கடன் வாங்கி தமிழ்நாடு திவாலாகி விட்டது. நேரடி கடன் 10 லட்சம் கோடி உள்பட 15 லட்சம் கோடி கடன் வழங்கியது தி.மு.க. ஆட்சி.
தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றததால் துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் வீதியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணிகுள் எந்தவித குழப்பமும் கிைடயாது. தி.மு.க. கூட்டணிக்குள் ஏகப்பட்ட உள் குழப்பம் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை வெளியிட்டார்.
சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* மக்கள் பணியில் கவனம் தேவை எனக்குறிப்பிட்டு தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை அவர் வெளியிட்டார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.
கடந்த 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையிலான அந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு கிராம் ரூ.270
18-02-2026- ஒரு கிராம் ரூ.260
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
- விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர்.
- விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக குழு அமைக்கும் நடவடிக்கை யிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர் களிடம் இருந்து ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியுள்ளார்.
த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தும் விருப்பமனு பெறப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் பெயரிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரிலும் ஏராளமானவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க.வில் இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி 2 அணிகள் தரப்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்டது. தே.மு.தி.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. முதல் விருப்பமனு விஜயகாந்த் பெயரில் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேமலதா பெயரிலும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
தி.மு.க.வும் தேர்தல் பணியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தி.மு.க., அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விருப்பமனு குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த மனுக்களை கொடுக்கும்போது பொது தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகம் இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதல் நாளான இன்று விருப்பமனு வாங்குவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் ஏராளமானோர் விருப்ப மனு வாங்கினார்கள்.
விருப்ப மனுவில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. தி.மு.க.வில் வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணியில் வகித்த மற்றும் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி மன்றம் மற்றும் வேறு அமைப்புகளில் வசிக்கும் பதவி, தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.
விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே. எஸ். இளங்கோவன், ஆஸ்டின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு 7 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். இதேபோல் ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்த விருப்ப மனுக்கள் அன்று மாலை வரை பெறப்பட உள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
- காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
- பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.
பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது
- புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு செல்ல புறப்பட்டவர்கள் செய்வதறியாமல் திண்டாடினர்.
சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மறுசீரமைப்பு பணி காரணமாக 5, 6-வது நடைமேடையில் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை:
இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுக்குள்(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் பனி முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சென்னை :
தி.மு.க. பொதுச் செயலாளர் துரை.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் 20.02.26 (இன்று) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
- இப்ராகிம் சட்ரன் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் அடித்தார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற கனடா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரான் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் குவித்தார். செடிகுல்லா அடல் 44 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.
கனடா சார்பில் ஜஸ்கரன் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கனடா அணி களமிறங்கியது. ஹர்ஷ் தாக்கர் 30 ரன்னும், சாத் பின் ஜாபர் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 4 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






