என் மலர்tooltip icon

    சென்னை

    • இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.
    • அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்;

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்தத் திட்டத்தின்படி சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் குறைவாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது அரசின் அலட்சியம் மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மைக்காக மாணவர்களுக்கு கிடைத்த தண்டனை ஆகும்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிக்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்த மாணவர்களும் இதன்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.

    ஆனால்,இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும்; அவர்களின் எண்ணிக்கை 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவித்தது தான் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.

    தனியார் பள்ளிகளில் நர்சரி பள்ளிகள் என்ற ஒரு பிரிவும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என்று இன்னொரு பிரிவும் உள்ளன. நர்சரி பள்ளிகள் சற்று சாதாரணமானவையாகவும், ஏழைக் குழந்தைகள் அணுகும் வகையிலும் இருக்கக்கூடும். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் சற்று அதிக அளவில் சேர்ந்துள்ளனர். மாறாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டணம் அதிகம், மாணவர் சேர்க்கை விதிகள் கடுமையானவை என்பதால் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். நர்சரி பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி உள்ள 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்திருப்பதில் இருந்தும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 34,666 இடங்களுக்கு வெறும் 16,006 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதிலும் இருந்து இதை உறுதி செய்து கொள்ளலாம்.

    மாணவர் சேர்க்கை அறிவிக்கையை கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்த போதே, இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். அதனால் சில பள்ளிகளில் உபரி இடங்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை இடங்களும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இது அரசின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட குழப்பம் ஆகும்.

    இப்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை. அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா? திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி விடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

    காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது, காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார். காவல்துறையின் தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கினார்.

    • காஷ்மீரின் உரிமைகளுக்காக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
    • பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    காஷ்மீரின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரின் குரலின் அடையாளமாக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரளா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன் காரணமாக வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

    • சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது.
    • காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பகுதிகளில் பதிவான காற்றின் தரக்குறியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு பெருங்குடியில் 229 ஆக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மணலியில் 175, மணலி நியூ டவுன், வேளச்சேரியில் தலா 152, அரும்பாக்கம் 146, ஆலந்தூர் 127, அம்பத்தூரில் 100 ஆக பதிவாகி உள்ளது.

    அதிகமாக பட்டாசுகளை வெடித்ததால் ஆபத்தான நிலையில் காற்றின் தரக்குறியீடு உள்ளதால் காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது. மழை குறுக்கிட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.

    இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 4,635 அழைப்புகள் வந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஒரே நாளில் 61 சதவீதம் வந்த கூடுதல் அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் அதில் 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது. 

    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    • தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து வருகிறது.
    • விளைவில் 1 சவரன் தங்கம் விலை லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

    அந்த வகையில் நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கும் , ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தீபாவளியை பண்டிகையான இன்று தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600

    16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200

    15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880

    14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-10-2025- ஒரு கிராம் ரூ.190

    17-10-2025- ஒரு கிராம் ரூ.203

    16-10-2025- ஒரு கிராம் ரூ.206

    15-10-2025- ஒரு கிராம் ரூ.207

    14-10-2025- ஒரு கிராம் ரூ.206

    • தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-

    இருள் இன்றுடன் விலகட்டும்,

    மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!

    இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×