என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் - அன்புமணி அறிவிப்பு
    X

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் - அன்புமணி அறிவிப்பு

    • பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது.
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    சென்னை:

    பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

    இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

    டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்பு மணி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் கடந்த 18-ந் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

    அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.

    கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26-ந் தேதி) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×