search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஜிபி சைலேந்திர பாபு
    X
    டிஜிபி சைலேந்திர பாபு

    மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை பாயும் -டிஜிபி எச்சரிக்கை

    மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5-1-2022 அன்று வழங்கிய நீதிப் பேராணையின்படி, மத்திய, மாநில அரசு சின்னங்களை முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் அரசு சின்னங்களை தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள், கொடிகள், பெயர் பலகைகள் மற்றும் கடிதங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றத்திற்கு தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. 

    மத்திய அரசு சட்டங்களான சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறாக பயன்படுத்துதல்) தடைச்சட்டம் 1950 மற்றும் விதிகள் 1982, இந்திய அரசு சினன்ங்கள் (தவறாக பயன்படுத்துதல்) தடைச்சட்டம் 2005-ன்படி அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் காவல்துறையினரால் எடுக்க சட்ட வழிமுறைகள் உள்ளன. 

    அரசு விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட பதவியில் உள்ள முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு சின்னங்களை தங்கள் வாகனம், முத்திரை, லெட்டர் பேடு மற்றும் விசிட்டிங் கார்டுகளில் பயன்படுத்தக் கூடாது.

    அரசு சின்னம்

    இச்சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம். காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கலாம். மேலும் வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் அல்லது வாகனத்தின் வேறுபகுதியில் அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்துவோர் மீது பிரிவு 177 மோட்டார் வாகனச் சட்டம் 1989-ன்படி நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை  தலைமை இயக்குனர் வழங்கி உள்ளார்.

    அதோடு அரசு சின்னத்தை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், அந்த நிகழ்வினை காணொளி காட்சியாக பதிவு செய்யவும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×