search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கை நாட்டு மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்டா வைரசைவிட ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் இது தாக்கும் என்றும், இந்தப் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டால் 2022-ம் ஆண்டில் இந்த தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றும உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

    முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல், கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுதல் ஆகிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவைகள் கடைபிடிக்கப் படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

    50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. இதற்கான விழிப்புணர்விலும் தொய்வு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழிகாடடு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதும், தடுப்பூசி செலுத்தியவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும், தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விரைந்து செலுத்துவதும் தமிழ்நாடு அரசினுடைய கடமை.

    ஒமைக்ரான்


    எனவே முதல்- அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திட ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும், வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது ரெயில் மூலமாகவோ தமிழ்நாட்டிற்குள் வருபவர்களையும் பரிசோதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கை நாட்டு மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×