search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    உள்ளாட்சி தேர்தல் வெற்றி: மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நற்சான்றிதழ் - கே.எஸ். அழகிரி

    தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்திருக்கிறார்கள்.

    74 ஊராட்சி ஒன்றியங்களில் 73லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. அதே போல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

    கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பயனாளிகளுக்கு முழுமையாக சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும்.

    மக்கள் பங்கேற்கிற ஜனநாயக அமைப்பாக இருக்கிற ஊரக உள்ளாட்சி பொறுப்புகளில் தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முக ஸ்டாலின்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...கோழி இறைச்சி-குளிர்பானத்தை குடித்ததால் தாய்-மகள் உயிரிழந்தனரா?: போலீசார் விசாரணை 

    Next Story
    ×