என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சூறை காற்றால் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன.
கொரோனாவால் சந்தைகள் முடங்கியதால் வாழைத்தார் வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சூறைக்காற்றில் வாழைகள் சாய்ந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.
வங்க கடலில் உருவாக விருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் - அதனால் கோடை வெப்பத்தின் கடுமை தணியும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் மே 19, 20 ஆகிய தேதிகளில் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனால், கடலூர், மயிலாடுதுறை, நாகை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து விழுந்து விட்டன.
இவை தவிர சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை பருவ நெற்பயிரும் சேதமடைந்துள்ளது. பட்ட காலிலேயே படும்.... கெட்ட குடியே கெடும் என்பது உழவர்களுக்குத் தான் பொருந்தும் போலும்.
வாழைப் பயிர் ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிக அளவில் அறுவடை செய்யப்படும். தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த ஆண்டு வாழைப்பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தாலும் கூட, கொரோனா காரணமாக வாழையின் தேவையும், வணிக வாய்ப்புகளும் குறைந்ததால் அவற்றை வாங்குவதற்கு வணிகர்கள் யாரும் முன்வரவில்லை.
வாழையைப் பொறுத்த வரை உணவுக்காக கொள்முதல் செய்யப்படும் வாழை வகைகளை விட, திருவிழாக்கள் மற்றும் வீட்டு விஷேசங்களுக்காக கொள்முதல் செய்யப்படும் வாழைகள் தான் அதிகமாகும்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருமணங்கள், காதணி விழாக்கள் உள்ளிட்ட விஷேசங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டிருப்பதாலும் வாழைத்தார்கள் போதிய அளவில் விற்பனை செய்யப்படவில்லை.
கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைப்பயிர்கள் சூறைக்காற்றுக்கு இரையாகி உழவர்களுக்கு துயரத்தைக் கொடுத்துள்ளது. அந்தத் துயரத்தை தமிழக அரசு தான் துடைக்க வேண்டும்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கி, உழவர்களின் துயரத்தை தமிழக அரசு துடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்