search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு

    ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு - ரூ.2,500 வினியோகம் தொடங்கியது

    ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது.
    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

    இதற்காக ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்று தொடங்கியது.

    பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்படுகிறது.

    ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ரேஷன் கடைகளில் பண புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை சார்பில் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.

    திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே ரேஷன் அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
    Next Story
    ×