search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுகிறது- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

    7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. 24 மணி நேர இடைவெளியில் அழைப்பு விடுத்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம், நாட்டின் வருங்காலத் தலைமுறையாம் மாணவர் சமுதாயத்திற்குப் புதிய நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.

    பொதுமக்களின் நலனுக்காக, பாடுபடுகிற இயக்கமாக தி.மு.கழகம் இருப்பதால், மக்களின் பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியினை வழங்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதன் அடையாளம்தான் தி.மு.கழகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் தன்னெழுச்சியாகத் திரள்கின்ற மக்களின் பேரார்வம்.

    மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற ‘கொலைகார’ நீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் தி.மு.கழகத்தின் நிலை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தோம். ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் என்ன கதியானது என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்து, பல மாணவர்களின் உயிர்ப்பறிப்புக்கு காரணமான மாபாதகச் செயலைச் செய்தது அ.தி.மு.க. அரசு.

    சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, ராஜ்பவன் மேசையிலேயே தூசு படிந்து கிடக்கிறது. அதனை விரைந்து நிறைவேற்றி, அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதினேன். அவர், இந்தத் தீர்மானம் குறித்து சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற வேண்டி இருப்பதால், 4 அல்லது 5 வாரங்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்துப் பதில் கடிதம் அனுப்பினார்.

    அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். மக்கள் வழங்கிய அதிகாரத்தை மத்திய அரசிடமும் அதன் பிரதிநிதியான ஆளுநரிடமும் அடமானம் வைத்த அ.தி.மு.க. அரசு, இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பல உண்மைகளை மறைத்து, மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கிற 7,968 மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் மட்டும் 3,054. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 3.4 லட்சம் பேர். அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் 0.15 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில், நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தை எந்த அடிப்படையில் 7.5 சதவீதமாக எடப்பாடி அரசு குறைத்தது? இதுதான் ஏழை எளிய மாணவர்களுக்குச் செய்யும் நீதியின் லட்சணமா?

    நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கையை இன்றுவரை சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யவில்லை. பொது வெளியிலும் வைக்காததன் மர்மம் என்ன? யாருடைய அச்சறுத்தலுக்குப் பயந்து நடுங்கி பம்முகிறது அரசு?

    5 வாரங்களில் முடிவு எடுப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தாலும், ஏறத்தாழ 5 மாதங்களாகவே முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் அ.தி.மு.க. அரசால் மறைக்கப்பட்ட உண்மை. ஆம்.. ஜூன் மாதம் 15ம் தேதி முதல் இந்தச் சட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. ஜூன் 15-ந்தேதி தமிழக அமைச்சரவை கூடி 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் அதைக் கிடப்பில் போடவில்லை. மாறாக, எடப்பாடி அரசுக்கே திருப்பி அனுப்பிவைத்தார்.

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்தால் போதாது. தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு, அவசர சட்டத்தைத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.

    அதை வெளியேகூடச் சொல்லாமல், ஆளுநரின் உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி, திருத்தம் செய்து, அவர் கேட்டவாறே எடப்பாடி அரசு அனுப்பி வைத்தது. அதன்பிறகாவது ஒப்புதல் கிடைத்ததா? அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் இசைவு தரவில்லை.

    அதன்பிறகு, செப்டம்பர் 15-ந்தேதி, தமிழக சட்டப் பேரவையில் இதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டு 5 வாரங்கள் கடந்துவிட்டன. இன்னும் 4 வார அவகாசம் வேண்டும் என ஆளுநர் சொல்கிறார். டெல்லி எஜமானர்கள் கண் அசைவுக்கு ஏற்ப ஆளுநர் இழுத்தடிக்கிறார். ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் பார்த்தால் 5 மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனை, ஏனென்று கேட்க முதுகெலும்பு உள்ள அரசு தமிழ்நாட்டில் இல்லை. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் கேட்கிறது.

    மாநில ஆளுநரின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. அதிகார எல்லை மீறலானது. அதிகாரத்தில் இருக்கின்ற முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநரிடம் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட கையாலாகாத நிலையில், முதலமைச்சர் பழனிசாமியோ எதிர்க்கட்சித் தலைவரான என் மீது பாய்கிறார்.

    துணிவிருந்தால் ஆளுநரிடம் உரிமைக்குரலை எழுப்பட்டும். ஆளுநருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை மறைக்காமல் உரைக்கட்டும். உண்மையான அக்கறையும் உறுதியான நிலைப்பாடும் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்தட்டும். அதுவரை, தி.மு.கழகத்தின் போராட்டம் ஓயாது.

    ஊழலில் புரண்டு பதவி சுகம் அனுபவித்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விலையாக மத்திய அரசிடம் தனது உரிமைகளைப் பறி கொடுத்திருக்கும் இந்த அடிமைக் கூட்டத்தின் ஆட்டம் அதிக காலம் நீடிக்கப் போவதில்லை. ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்.

    அப்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும். நலன் பெருகும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×