search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கோவில் திருவிழாவில் கொலை: விவசாயி உடலுடன் 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

    மதுரை அருகே கோவில் திருவிழாவில் விவசாயி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் 2-வது நாளாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ளது சூலப்புரம். இந்த கிராமத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ஆண்டு தோறும் 2 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது ஒரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டதால் இந்த ஆண்டு திருவிழா நடத்த அரசு தடை விதித்தது. இருப்பினும் அமைதியாக விழாவை நடத்துவோம் என இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அதன் பிறகு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இதன் பேரில் நேற்று விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை (வயது 40) என்பவர் நேற்று இரவு வீட்டில் இருந்து எழுமலை மெயின் ரோட்டிற்கு செல்ல புறப்பட்டார். அவர் சிறிது தூரம் நடந்து வந்த போது ஒரு கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்தது.

    அவர்களை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

    இதில் பலத்த காயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

    அவர் இறந்ததை உறுதி செய்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவம் சூலப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    செல்லத்துரை உடல் கிடந்த இடத்தில் அவரது உறவினர்களும், ஊர் மக்களும் திரண்டனர்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் செல்லத்துரையின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செல்லத்துரை உடலை சாலையிலேயே வைத்துக் கொண்டு அவர்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் சூலப்புரம் கிராமத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் இந்த கொலை செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்களை கைது செய்யும் வரை செல்லத்துரை உடலை அங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாது என உறவினர்கள் கூறினர். இதனால் அந்தப்பகுதியில் இன்று 2-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.

    சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×