என் மலர்
செய்திகள்

பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள்- நாராயணசாமிக்கு கவர்னர் பதில்
புதுச்சேரி:
அதிகாரிகளுடன் பேச தடை விதித்து கவர்னர் கிரண்பேடி அமைச்சர் கந்தசாமிக்கு கடிதம் எழுதினார். இதற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதா.? என கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மிக அழுத்தம் தரக்கூடிய காலத்தில் இருக்கிறோம். அந்த நேரத்தில் முன்னுரிமை தரவேண்டிய விஷயம் எதுவென்பதில் சரியான தேர்வு தேவை.
குற்றச்சாட்டுகளை வெளியிடுவதும், பொய்யைப் பரப்புவதும் மக்களை குணமாக்கப் போவதில்லை, ஆனால் அதிகமானவர்களை காயப்படுத்துகிறது. நீங்கள் சொல்லும், குற்றம் சாட்டும் அனைத்தையும் என்னால் மறுக்க முடியும், ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. தயவு செய்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். கொரோனா சவாலை எதிர் கொள்ள மத்திய அரசு தந்துள்ள ஐ.சி.எம்.ஆர். குழுவின் முழு உதவியை பெறுங்கள்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எங்கு நடக்கிறது என்று நான் உங்களுக்கு கேள்வி எழுப்புகிறேன். அதுதொடர்பான விஷயம் ஏதும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லை.
ஆனால் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் மீனவர் விவகாரத்திலும் எந்த விஷயமும் ராஜ்நிவாசில் நிலுவையில் இல்லாத போதும் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள்.
அதேபோல் பட்ஜெட் அதிகாரியாரால் அச்சுறுத்தப்பட்டார் என்று கேள்வி எழுப்புகிறேன். இதேபோல் வேறு பல விஷயங்களும் உள்ளன. தயவு செய்து பிரச்சினைகளை திசைதிருப்பாதீர்கள்.
இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.