search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    பைக்கில் அமரச்சொல்லி கல்லூரி மாணவிக்கு தொல்லை- வாலிபர் மீது போலீசில் புகார்

    தினமும் பின்தொடர்ந்து சென்று பைக்கில் அமரச்சொல்லி கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் 17வயது மகள் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரி மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டார்.

    இதை பயன்படுத்தி அந்த வாலிபர் கடந்த 6 மாதங்களாக தினந்தோறும் காலையும் மாலையும் மோட்டார் சைக்கிளில் மாணவியை பின் தொடர்ந்து சென்று தனது வண்டியில் அமருமாறு கூறி வற்புறுத்தி மிரட்டி வருகிறார்.

    மேலும் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்தும் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

    இது குறித்து மாணவியின் தந்தை வடபழனி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் ‘பக்கத்து வீட்டு வாலிபரின் நடவடிக்கையில் மனரீதியாக பாதிப்பு அடைந்துள்ள எனது மகள் கல்லூரிக்கு செல்ல மறுத்து வருகிறார். எனவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரேணுகா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .

    Next Story
    ×