search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை- திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

    அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பி பேசினார். அந்த உரிமை மீறலை சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.

    இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேற்றைய விவகாரம் தொடர்பாக ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு அனுமதி கேட்டார்.

    அதற்கு சபாநாயகர், ஏற்கனவே நேற்று முடித்து வைக்கப்பட்ட பிரச்சனையை இன்று எழுப்ப அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார். அப்போது தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் கூறும்போது, தங்கம் தென்னரசு விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

    இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்கம் தென்னரசு கருத்து தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். சபாநாயகர் அதை ஏற்கவில்லை.

    இதையடுத்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும் என்று அமைச்சர் பாண்டியராஜன் ஒரு தவறான தகவலை தெரிவித்தார். பாராளுமன்றத்திலேயே இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    எனவே அமைச்சர் அவையை மீறி விட்டதாக சபையில் பேசினோம். ஆனால் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வராமல் சபாநாயகர் தள்ளுபடி செய்து விட்டார். மீண்டும் அமைச்சர் அதே தவறான தகவலை சபையில் தெரிவித்தார்.

    எனவே இதுபற்றி மீண்டும் விவாதிக்க வேண்டும் அல்லது இந்த பிரச்சனையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×