search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    ரஜினிகாந்த் பா.ஜனதாவின் நிழலாக செயல்படுகிறார்- நாராயணசாமி

    ரஜினிகாந்த் போகும் பாதையை பார்க்கும் போது அவர் பா.ஜனதாவின் நிழலாக செயல்படுகிறார் என்று புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வன்முறை நடக்கவில்லை. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் உள்ளே நுழைந்துள்ளது.

    டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை இரவு போலீசார் அடித்து துன்புறுத்திய சம்பவத்தினால் தமிழக முழுவதும் போராட்டம் நடக்கிறது.

    மத்திய அரசு சட்டத்தை சரி செய்யாமல் போராட்டத்தை ஒடுக்க பல சக்திகளை பயன்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு. அதை தடுப்பது ஜனநாயகம் அல்ல. இதனை சர்வாதிகாரம் என்று நீதிபதியே கூறியுள்ளார்.

    போலீசாரின் நடுநிலையான விசாரணையோ நீதிமன்ற விசாரணையோ இருந்தால் உண்மை தெரியும். காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்கியதற்கு யார் பொறுப்பு..?

    சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், கல்வீச்சின் மூலம் போராட்டக்காரர்கள் மீது கெட்ட பெயரை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதுதொடர்பான புகாரை போலீசார் விசாரிக்க வேண்டும்.

    வெளிநாட்டில் இருந்து எந்தவொரு தலைவர் வந்தாலும் அவர்களை பிரதமர் குஜராத்திற்கு அழைத்து செல்வது தான் வாடிக்கை. மற்ற மாநிலங்கள் இருப்பது தெரியாது. மேம்பாலத்தின் கீழ் மக்கள் குடிசை போட்டு வாழ்வது தான் குஜராத் மாநிலம். அதை மறைக்க வேலைகளை செய்கின்றனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் போது குடிசை பகுதிகளை மறைத்து இந்தியா ஒளிருகிறது என்று வாய் பேசுவது சரியாக இருக்காது. ஏழை மக்கள் பிரச்சினைகளை போக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. பொருளாதாரத்தை இழப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    மக்களை திசை திருப்பினால் மோடியும், அமித்ஷாவும் மக்கள் பல பிரச்சினைகளை மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கள் எந்த பிரச்சினைகளை மறக்க மாட்டார்கள். நாட்டிற்கு விரைவில் விடிவு காலம் வரும்.

    நடிகர் ரஜினிகாந்த் போகும் பாதையை பார்க்கும் போது அவர் பா.ஜனதாவின் நிழலாக செயல்படுவது தெரிகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×