search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சங்கத்தினர் போராட்டம்
    X
    தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    தொழிற்சங்கத்தினர் போராட்டம்- திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் கைது

    திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தொழிற் சங்கத்தினர் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட பல்வேறு சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து துறை ஊழியர் சங்கங்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு குறைந்த அளவு ஊழியர்களே வந்தனர். மேலும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பழனியில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில குழு உறுப்பினர் பாண்டி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் கந்தசாமி, குருசாமி உள்பட கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர்.

    ஆனால் அதனையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும், கம்யூனிஸ்ட்டு கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்லில் தபால் நிலையம், வர்த்தக நிறுவனங்கள், தனியார் தோல் தொழிற்சாலைகளை சேர்ந்த 20 சதவீத ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. நகர் பகுதியில் எவ்வித பாதிப்பின்றி இயல்பு நிலையே இருந்தது.

    திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு தொ.மு.ச. மாநில தலைவர் பசீர்அகமது தலைமையில் திண்டுக்கல் மாவட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கோபால்சாமி, கண்ணன், பாலன், சந்திரமோகன், செந்தில்குமார், ஜெயசீலன், அழகர்சாமி, மணிவேல், மோகன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சின்னாளபட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் மாவட்ட செயற்குழு முத்துச்சாமி தலைமையில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 90 பேரை கைது செய்தனர்.

    செம்பட்டியில் மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 350 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வடமதுரையில் 15 பேரும், அய்யலூரில் 60 பேர், கோபால்பட்டியில் நிர்வாகிகள் பெருமாள், சிலம்பரசன், பாப்பாத்தி, பெரியசாமி, வெள்ளைக்கண்ணன் உள்பட 29 பேர் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×