search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரை ஏற்றி தூக்கி விடுவேன் - புழல் சிறையில் இருந்து தொழில் அதிபரை மிரட்டிய ரவுடி

    புழல் சிறையில் இருந்து தொழில் அதிபரை மிரட்டிய பிரபல ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல கடை வீதியில் வணிக வளாகம் நடத்தி வருபவர் ரகுராமன். வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    இவரது வணிக வளாகத்தில் இளமுருகன்மேலாளராக உள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி இளமுருகனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர், “நான் கபிரியேல் பேசுகிறேன். உன்னுடைய முதலாளியையும் அவரது குடும்பத்தினரையும் காரை மோதி தூக்கச் சொல்லி விட்டேன். உடனடியாக உன் முதலாளியை என்னிடம் பேசச் சொல்” எனக் கூறி உள்ளார்.

    இதுகுறித்து அப்போது இளமுருகன் கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

    ரகுராமனுக்கும் அவரது அண்ணன் மயிலாடுதுறையைச் சேர்ந்த தொழில் அதிபர் சீத்தாராமனுக்கும் சொத்துத்தகராறு இருந்து வந்துள்ளது.

    இதில் பஞ்சாயத்து செய்வதற்காக சென்னை புழல் சிறையில் உள்ள பிரபல ரவுடி கபிரியேலை சீத்தாராமன் தொடர்பு கொண்டு பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து, கபிரியேலிடம் சீத்தாராமன் செல்போனில் பேசிய உரையாடல் ஆடியோவை மயிலாடுதுறை போலீசார் கைப்பற்றினர்.

    இதன் அடிப்படையில் புழல் சிறையில் இருக்கும் ரவுடி கபிரியேல், சீத்தாராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×