search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நிலவரம்
    X
    மழை நிலவரம்

    அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது

    அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    • அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது
    • தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
    • மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

    சென்னை:

    அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது.

    அரபிக்கடல் பகுதியில் உருவான புயல் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக வறண்ட நிலை காணப்பட்டது. ஆனாலும் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதால் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்தது.

    இந்தநிலையில் தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி அந்தமான் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது இப்போது புயலாக மாற உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது.

    இது மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறுகிறது. அப்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரை வங்கக்கடலில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம்.

    மழை

    புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×