search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    அமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி அமித்ஷா, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமீபகாலமாக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசி வருகிறார். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நோக்கம் நிறை வேறுகிறதோ, இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழியின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார்.

    அதேபோல, கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது, இதனால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார். இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோலினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வருகிற நோக்கத்தில் அவரது பதுங்கு திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பல கட்சி ஆட்சி முறை தோற்று விட்டதாக அமித்ஷா மேலும் கூறுகிறார். இதற்கு என்ன அடிப்படை என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை மூடிமறைத்து அமித்ஷா பேசியிருக்கிறார். அன்று நடைபெற்ற பல கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் தான் சுதந்திர இந்தியா காணாத வகையில் 2005 முதல் மூன்று ஆண்டுகள் 9 சதவீதத்திற்கு மேலாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. அந்த சாதனை பட்டியல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரே நாளில் ரூபாய் 12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஒன்றை அமித்ஷா கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட 2ஜி வழக்கில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக ஊடகங்களின் துணையோடு ஆதாரம் இல்லாமல் பா.ஜ.க. அவதூறு பிரச்சாரம் செய்தது. ஆனால், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் எந்த ஆதாரத்தையும் சி.பி.ஐ. வழங்கவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இதைவிட ஒரு அவமானம் பா.ஜ.க.வுக்கு வேறும் எதுவும் இருக்க முடியாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக மீண்டும் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும்.

    அமித்ஷா


    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும், எந்த நீதிமன்றத்திலும் இல்லை. இன்றைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு நீதிமன்றத்திற்கு முன்னால் தவிடு பொடியாகிற காலம் வெகு தொலைவில் இல்லை. ப.சிதம்பரத்தின் மீது விசாரணை என்ற கூறி சிறையில் அடைக்கலாமே தவிர, ஆதாரங்களை திரட்டி வழக்கு போட முடியாது. அப்படி வழக்கு போட்டால், நீதிமன்றத்தில் அது தகர்த்தெறியப்படும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை 2024-ம் ஆண்டுக்குள் ரூபாய் 350 லட்சம் கோடியாக உயர்த்தப் போவதாக அமித்ஷா கூறுகிறார். இந்தளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிற அமித்ஷா ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியுதவியை ஏன் பெற்றார் என்பதை விளக்க வேண்டும். ரூ.90 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ்மோடி, விஜய் மல்லையா ஆகியோரை தேடிக் கண்டுபிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து, விசாரணைக்கு உட்படுத்த முடியாத கையாலாகாத அரசாக பா.ஜ.க. இருந்து வருகிறது.

    காஷ்மீரில் 43 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என பெருமிதம் அடைகிறார் அமித்ஷா. ஆனால், 45 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்து ஏறத்தாழ 1 கோடியே 20 லட்சம் இஸ்லாமியர்களை காஷ்மீர் மாநிலத்தில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல், தகவல் தொடர்பில்லாமல் அடைத்து வைத்து, காஷ்மீர் மாநிலத்தையே மயான பூமியாக மாற்றியதில் அமித்ஷா புளகாங்கிதம் அடைகிறார். மூன்று முன்னாள் முதலமைச்சர்களை சிறையில் அடைத்த பா.ஜ.க. காஷ்மீரில் நிலவுகிற சூழல் குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?

    அனைத்து துறைகளிலும் தோல்வி ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை எதிர் கொண்டிருக்கிற போது, மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சியை முறியடிக்கிற வகையில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் கடுமையான பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே வகுப்பு வாத சக்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×