search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சையில் ரெயில் தண்டவாள பொருட்களை திருடிய வாலிபர் கைது

    தஞ்சையில் ரெயில் தண்டவாள பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே மண்டல கமி‌ஷனர் மொய்தீன் ஆணைப்படி, தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தஞ்சை ரெயில்வே பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று நள்ளிரவில் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தலைமை ஏட்டு செந்தில்குமார், காவலர்கள் சுரேஷ்குமார், ஆறுமுகம் மற்றும் போலீசார் சாலியமங்கலம் தஞ்சை பகுதிகளுக்கு இடைப்பட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலியமங்கலம் ரெயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் இரும்பு பிளேட்டுகளுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

    பிடிபட்ட வாலிபர் ரெயில் தண்டவாளத்தை இணைக்க பயன்படும் ரெயில்வே பிஷ்பிளேட்டுகளை திருடியதும், அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை தஞ்சை நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மணி கண்டனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×