search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- அமைச்சர் செல்லூர் ராஜூ

    ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து குழு பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறை சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை 27 பெட்ரோல் பங்க்குகளை நடத்தி வருகிறது. இது 28-வது பங்க். இன்னும் 13 பங்க்குள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் தரமான, அளவு குறையாத பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. ரே‌ஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் வந்தால் ஊழியர்கள் மீதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.



    இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை என்பதை முதல்- அமைச்சர் விளக்கமாக கூறி இருக்கிறார். மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×