search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி கோவில்களில் பக்தர்களிடம் நகை பறிக்க முயன்ற பெண்கள் கைது
    X

    பழனி கோவில்களில் பக்தர்களிடம் நகை பறிக்க முயன்ற பெண்கள் கைது

    பழனி பகுதியில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் வாரவிடுமுறை, மாத கார்த்திகை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணம், நகையை திருடி தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். அந்தவகையில் பழனி மாரியம்மன் கோவில் திருவிழாவிலும் பெண் ஒருவரிடம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள், பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபடும் திருடர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள், பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள அடிவாரம், மலைக்கோவில் ஆகிய இடங்களில் பழனி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி மலைக்கோவிலில் சந்தேகப்படும்படி நின்ற 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மேற்கு காந்திநகர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி சாந்தி (வயது 56), பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த லோகநாதன் மனைவி செல்வி (55) என்பதும் தெரியவந்தது.

    இதில் சாந்தி தற்போது வயலூர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பழனி பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா காலங்கள் மற்றும் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் பக்தர்களின் நகைகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×