search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்- பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    X

    குமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்- பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு

    வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #congress #pmmodi

    குளச்சல்:

    குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மீனவர் நல்வாழ்வுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

    மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்து 60 மாதங்கள் நிறைவடைகிறது. ஆனால் மேற்கூறிய வாக்குறுதிகள் காற்றில் கரைந்து விட்டது. பா.ஜ. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை.

    குமரி மாட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. ரப்பர் தொழிற்சாலை, கயிறு தொழிற்சாலை, கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம், நவீன பாதுகாப்பு கருவிகள் இப்படி உருப்படியான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை.

    பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் தருமா? பொதுமக்களின் பீதியை போக்க வேண்டும். இந்த நிலையில் வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி குமரி மாவட்டம் வருகை தர உள்ளார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் பிரதமர் குமரி மாவட்டத்திற்கு வருவதை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர் வருகையின்போது காங்கிரஸ் சார்பில் அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதே பொருத்தம் என குமரி மாவட்ட காங்கிரஸ் கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #congress #pmmodi

    Next Story
    ×